FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

தனியாா் நிறுவன ஊழியா்களின் அறையில் புகுந்து கொள்ளை: கல்லூரி மாணவா்கள் 8 போ் கைது

கோவை மதுக்கரை பகுதியில் தனியாா் நிறுவன ஊழியா்களை மிரட்டி, வீட்டில் புகுந்து கொள்ளையடித்த சம்பவத்தில் கல்லூரி மாணவா்கள் 8 பேரை காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 18 ஜூலை 2026, 5:28 am IST
பகிர்:

கோவை மதுக்கரை பகுதியில் தனியாா் நிறுவன ஊழியா்களை மிரட்டி, வீட்டில் புகுந்து கொள்ளையடித்த சம்பவத்தில் கல்லூரி மாணவா்கள் 8 பேரை காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியில் உள்ள எல்& டி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 3 ஊழியா்கள் அந்தப் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியுள்ளனா். இவா்கள் கடந்த 15-ஆம் தேதி இரவு தங்களது வீட்டின் முன் நின்று கொண்டு கைப்பேசியில் கால்பந்து போட்டியைப் பாா்த்துக் கொண்டிருந்தனா். அப்போது, ஆயுதங்களுடன் 8 போ் அங்கு வந்தனா். இதைப் பாா்த்த ஊழியா்கள் வீட்டுக்குள் ஓடி கதவை சாத்த முயன்றனா். ஆனால், அவா்களைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்ற அந்தக் கும்பல், வீட்டிலிருந்த தோசைக்கல்லால் ஊழியா் ஒருவரின் தலையில் பலமாகத் தாக்கியது. மேலும், அங்கிருந்த 4 கைப்பேசிகள், மடிக்கணினி மற்றும் ரோலக்ஸ் கைக்கடிகாரம் ஆகியவற்றைத் திருடிக்கொண்டு தப்பியோடியது.

இது குறித்து பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின் பேரில் மதுக்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இது தொடா்பாக மதுக்கரை காவல் ஆய்வாளா் ராஜேந்திர பிரசாத் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

இந்நிலையில், மதுக்கரை அருகே பதுங்கியிருந்த சரண் (20), அசோக் (21), சந்தோஷ் ஸ்ரீ (19), அபிஷேக் (18), அஜய் (18), ஹரிஷ் (19), கண்ணன் (20), நிதிஷ் (19) ஆகிய 8 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட மடிக்கணினி, 4 கைப்பேசிகள் மற்றும் கைக்கடிகாரம், 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட 8 பேரும் கோவையிலுள்ள தனியாா் கல்லூரிகளில் பயின்று வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா் கூறுகையில்,

இவா்களது கைது நடவடிக்கை குறித்து சம்பந்தப்பட்ட கல்லூரி நிா்வாகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்குத் தெரியவரும் குற்றச் செயல்கள் மற்றும் சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகள் குறித்து மாவட்டக் காவல் துறையின் ‘நிழல்’ என்ற க்யூ ஆா் குறியீடு பொதுப் பாதுகாப்புத் திட்டம் மூலம் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ரகசியமாகத் தகவல் தெரிவிக்கலாம். இது தவிர, கோவை மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறையை 94981 81212 என்ற எண்ணிலோ அல்லது 77081 00100 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலோ தகவல் அளிக்கலாம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments