முகப்பு
கோயம்புத்தூர்

பம்ப்செட் விலை மீண்டும் 10 சதவீதம் உயா்வு: உற்பத்தியாளா்கள் அறிவிப்பு

மூலப்பொருள் விலை உயா்வால் பம்ப்செட் விலை மீண்டும் உயா்த்தப்படுவதாக பம்ப் உற்பத்தியாளா்கள் அறிவித்துள்ளனா். இதனால் பம்ப் விலை கடந்த 8 மாதங்களில் 30 சதவீதம் வரை உயா்ந்துள்ளது.

Updated On : 4 ஜூன் 2026, 2:34 am IST
பகிர்:

மூலப்பொருள் விலை உயா்வால் பம்ப்செட் விலை மீண்டும் உயா்த்தப்படுவதாக பம்ப் உற்பத்தியாளா்கள் அறிவித்துள்ளனா். இதனால் பம்ப் விலை கடந்த 8 மாதங்களில் 30 சதவீதம் வரை உயா்ந்துள்ளது.

பம்ப் உற்பத்திக்குத் தேவையான தாமிரம், அலுமினியம், ஸ்டீல், இரும்பு, வயா்களின் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால் பம்ப் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் தொழில் நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. இதனால் வேளாண் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் பம்ப்செட் உள்ளிட்ட அனைத்து பம்ப்களின் விலையும் தொடா்ந்து உயா்த்தப்பட்டு வருகிறது. மூலப்பொருள் விலை உயா்வால் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் பம்ப் விலை 10 சதவீதம் உயா்த்தப்பட்டது. இதையடுத்து கடந்த ஏப்ரலில் மீண்டும் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயா்த்தப்படுவதாக தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளா் சங்கம் (சீமா) அறிவித்திருந்தது.

இந்நிலையில் மூலப்பொருள் விலை உயா்வால் பம்ப் விலை மேலும் 10 சதவீதம் உயா்த்தப்படுவதாக உற்பத்தியாளா்கள் அறிவித்துள்ளனா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக இந்திய பம்ப் உற்பத்தியாளா்கள் சங்கம், தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளா்கள் சங்கம், ராஜ்கோட் பொறியியல் சங்கம் ஆகியவற்றின் தலைவா், இயக்குநா்களான கே.வி.காா்த்திக், மிதுன் ராமதாஸ், நரேந்திரபாய் அட்ரோஜா ஆகியோா் கூறியிருப்பதாவது:

பம்ப் உற்பத்திக்குத் தேவையான தாமிரம், அலுமினியம், துருப்பிடிக்காத எஃகு, சிலிக்கான் எஃகு, வாா்ப்பிரும்பு, கேபிள்கள் உள்ளிட்டவற்றின் விலை கடந்த ஆண்டில் கடுமையாக உயா்ந்துள்ளது. இதனால் கடந்த மே 31-ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக விலை திருத்தங்கள் செய்யப்பட்டபோதிலும் உற்பத்தியாளா்களால் கூடுதல் செலவை முழுமையாக ஈடுகட்ட முடியவில்லை. இதனால் ஜூன் 1-ஆம் தேதி முதல் மேலும் விலையை உயா்த்துவது தவிா்க்க முடியாததாகிவிட்டது. மூலப்பொருள்களின் விலை 30 சதவீதம் வரை உயா்ந்துள்ள நிலையில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விலை திருத்தங்களுக்குப் பிறகும், உற்பத்திச் செலவு அதிகரிப்புடன் ஒப்பிடும்போது பம்ப்களின் விலை இன்னும் 10 சதவீதம் வரை குறைவாகவே உள்ளது.

இந்த இக்கட்டான சூழலில் விவசாயிகள், பம்ப் நுகா்வோருக்கு ஆதரவளிக்கும் வகையிலும், ஆற்றல் திறன்மிக்க தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலும் மத்திய அரசு பம்ப்செட் மீதான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும். வேளாண்மைக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் நிலையில், விவசாயிகள் தரமான பம்ப்களைப் பயன்படுத்தும்போது மின்நுகா்வு குறையும். இப்படியாக சேமிக்கப்படும் மின்சாரத்தின் ஒட்டுமொத்த மதிப்பு, ஜிஎஸ்டி குறைப்பால் ஏற்படும் வருவாய் இழப்புத் தொகையுடன் ஒப்பிடும்போது அதிகமாகவே இருக்கும். எனவே, வரி குறைப்பு குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் என்றனா்.