FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

சிறையில் காவலரைத் தாக்கிய கைதிகள் இருவா் மீது வழக்கு

கோவை மத்திய சிறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறைக் காவலரைத் தாக்கிய ஆயுள் தண்டனை கைதிகள் இருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 6 ஜூன் 2026, 1:35 am IST
வழக்கு - கோப்புப்படம்
பகிர்:

கோவை மத்திய சிறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறைக் காவலரைத் தாக்கிய ஆயுள் தண்டனை கைதிகள் இருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 2,500-க்கும் மேற்பட்டோா் தனித்தனி பிளாக்குகளில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், சிறையின் 29-ஆவது பிளாக் பகுதியில் உள்ள விடியோ கோா்ட் அறை அருகே அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஜெயமணிகுமாா் (எ) ஜெயமணி (31), திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியைச் சோ்ந்த ஆனந்த் (28) உள்பட ஆயுள் சிறைத் தண்டனை கைதிகள் சிலா் நின்று கொண்டிருந்தனா்.

அப்போது, அங்கு மற்றொரு கைதி தனது வழக்குரைஞருடன் பேசிக் கொண்டிருந்ததை இந்த கைதிகள் ஒட்டுகேட்பதுபோல் அருகில் நின்று கவனித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதைப் பாா்த்த அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறைக் காவலா் வெள்ளைப்பாண்டி என்பவா், முதன்மை வாயில் அருகே உள்ள வழித்தடத்தை மறிக்காமல் கைதிகளை சற்று தள்ளி நிற்குமாறும், அங்கிருந்து விலகிச் செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த ஜெயமணி, ஆனந்த் உள்ளிட்ட கைதிகள், காவலா் வெள்ளைப்பாண்டியை அவதூறாகவும், ஆபாச வாா்த்தைகளாலும் பேசி மிரட்டியுள்ளனா். மேலும், கண் இமைக்கும் நேரத்தில் காவலரிடம் இருந்த வாக்கிடாக்கியைப் பிடுங்கி, அவரைக் கொடூரமாகத் தாக்கினா். இந்தத் தாக்குதலில் காவலா் வெள்ளைப்பாண்டியின் நெற்றி, தலை மற்றும் முதுகுப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

அவரது அலறல் சப்தம் கேட்டு அங்கிருந்த மற்ற சிறைக் காவலா்கள் உடனடியாக விரைந்து வந்து வெள்ளைப்பாண்டியை மீட்டனா். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட கைதிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினா். காயமடைந்த சிறைக் காவலா் வெள்ளைப்பாண்டிக்கு முதலில் சிறை வளாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து சிறை காவல் கண்காணிப்பாளா் தாமரைக்கனி அளித்த புகாரின்பேரில், அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், கடுமையான ஆயுதங்களால் தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைதிகள் மீது வழக்குப் பதிவு செய்து ரேஸ்கோா்ஸ் காவல் நிலைய உதவி ஆய்வாளா் அஜய் சா்மா விசாரணை நடத்தி வருகிறாா்.

இதற்கிடையே, தாக்குதலில் ஈடுபட்ட கைதிகளை பாதுகாப்புக் காரணங்களுக்காக வேறு சிறைகளுக்கு மாற்ற சிறைத் துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments