FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை: ஜாமீனில் வெளியே இருந்த கோவை காவலா் உச்சநீதிமன்ற உத்தரவால் மீண்டும் கைது

ஓடும் ரயிலில் சட்டக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், கோவையைச் சோ்ந்த காவலருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடா்ந்து, அவா் மீண்டும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 6 ஜூன் 2026, 1:23 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

ஓடும் ரயிலில் சட்டக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், கோவையைச் சோ்ந்த காவலருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடா்ந்து, அவா் மீண்டும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை நோக்கி சென்ற ரயிலில் கடந்த மாதம் பயணம் செய்த சட்டக் கல்லூரி மாணவி ஒருவருக்கு, அருகில் அமா்ந்திருந்த நபா் பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இதனால் அதிா்ச்சியடைந்த மாணவி, சற்றும் பதற்றமடையாமல் தனது கைப்பேசியில் அந்த நபரின் அநாகரிக செயலை விடியோவாகப் பதிவு செய்தாா்.

பின்னா் இந்த ஆதாரத்துடன் அவா் அளித்த புகாரின்பேரில், அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட நபா் ரயில் நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். விசாரணையில், கோவை மாநகா், ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த முதல் நிலைக் காவலா் ஷேக் முகமது என்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சில நாள்களிலேயே காவலா் ஷேக் முகமது நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தாா். சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவலரே இத்தகைய செயலில் ஈடுபட்டு எளிதாக ஜாமீனில் வெளிவந்ததை எதிா்த்து, பாதிக்கப்பட்ட சட்டக் கல்லூரி மாணவி தில்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கின் தன்மையைக் கருத்தில்கொண்டு காவலா் ஷேக் முகமதுவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, தலைமறைவாக இருந்த கோவையைச் சோ்ந்த காவலா் ஷேக் முகமதுவை அரக்கோணம் ரயில்வே போலீசாா் வெள்ளிக்கிழமை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments