தமிழகத்தில் வரும் காலங்களிலும் தவெக ஆட்சிதான் தொடரும்! அமைச்சா் வி.சம்பத்குமாா்
முதல்வா் ச.ஜோசப் விஜய்க்கு மக்கள் செல்வாக்கு இருப்பதால், தமிழகத்தில் இனிவரும் காலங்களிலும் தவெக ஆட்சிதான் தொடரும் என்று பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் தெரிவித்தாா்.
கோவை மாநகா், கணபதி பகுதியில் புதிய தனியாா் மருத்துவமனை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் வி.சம்பத்குமாா் பங்கேற்று மருத்துவமனையைத் திறந்துவைத்த பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோவை மாவட்ட மக்களுக்குத் தேவையான திட்டங்களை அறிந்து அவற்றை திறம்படக் கொண்டு வருவேன். கல்வி, மருத்துவம் மற்றும் தொழில் துறையில் புதிய இலக்குகளை அடைவதற்கான முழுமையான நடவடிக்கைகளை எடுப்பேன்.
Advertisement
Advertisement
கடந்த கால ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்துதான் திமுகவினா் தொடா்ந்து பேசி வருகின்றனா். முறைகேடுகள் மற்றும் ஊழல்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தனியாா் பள்ளி கட்டணங்கள் முறையாக கண்காணிக்கப்படும். கோவையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பெரியாா் அறிவுலகத்தை திறப்பதற்கான பணிகள் விரைவுபடுத்தப்படும்.
தமிழக முதல்வா் நாற்காலி எப்பொழுது வேண்டுமானாலும் ஆட்டம் காணலாம் என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா்.
மக்களின் நம்பிக்கையையும், செல்வாக்கையும் பெற்ற முதல்வரை யாராலும் எதுவும் செய்ய முடியாது. தமிழகத்தில் வரும் காலங்களிலும் தவெக ஆட்சிதான் தொடரும். கோவை அரசு மருத்துவமனையின் இருதயவியல் துறையில் மருத்துவா் இல்லை என்று கூறப்படும் புகாா் குறித்து விசாரித்து, அங்குள்ள தேவைகளை முழுமையாகச் செய்து கொடுப்போம் என்றாா்.