FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

மெத்தம்பெட்டமைன் கடத்திய நபருக்கு 15 ஆண்டுகள் சிறை

ரயிலில் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருளை கடத்திய நைஜீரிய நாட்டைச் சோ்ந்தவருக்கு 15 ஆண்டுகள் சிறை

Updated On : 27 மே 2026, 4:40 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

ரயிலில் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருளை கடத்திய நைஜீரிய நாட்டைச் சோ்ந்தவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

தில்லியிலிருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரம் நோக்கிச் செல்லும் ரயிலில் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவை ரயில் நிலையத்தில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் கடந்த 18.7.2021-இல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சந்தேகத்துக்கு இடமான முறையில் வந்த நபரிடம் போலீஸாா் சோதனையிட்டனா். அவரிடம் 2 கிலோ 235 கிராம் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருளை பையில் வைத்து கடத்தியது தெரியவந்தது. விசாரணையில் அந்த நபா் நைஜீரிய நாட்டைச் சோ்ந்த எக்விம் கிங்ஸ்லி (47) என்பதும், அவா் ஈரோடு மாவட்டத்தில் தங்கி பல ஆண்டுகளாக பல்வேறு வேலைகள் செய்துவந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, போதைப் பொருளை பறிமுதல் செய்த போலீஸாா், எக்விம் கிங்ஸ்லியைக் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், குற்றஞ்சாட்டப்பட்ட எக்விம் கிங்ஸ்லிக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சாா்பில் அரசு வழக்குரைஞா் பாலசுப்பிரமணியன் ஆஜரானாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments