ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தின விழா: ரூ. 16 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் வ.உ.சி. பூங்கா விளையாட்டுத் திடலில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 50 பயனாளிகளுக்கு
ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் வ.உ.சி. பூங்கா விளையாட்டுத் திடலில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 50 பயனாளிகளுக்கு ரூ. 16.35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், சிறந்த சேவைக்காக பல்துறை சார்ந்த 256 பேருக்கு நற்சான்றிதழும் அரசு சார்பில் அளிக்கப்பட்டன.
விழாவில், மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறை, ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, தேசியக் கொடியின் மூவர்ண நிறங்களைக் கொண்ட பலூன்களை ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் ஆகியோரும் வானில் பறக்கவிட்டனர். தொடர்ந்து, சுதந்திரப் போராட்ட தியாகிகள், வாரிசுதாரர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து கெளரவிக்கப்பட்டது.
256 பேருக்கு நற்சான்றிதழ்:
சிறந்த முறையில் பணியாற்றியதற்காக காவல் துறையைச் சேர்ந்த 73 பேர், வருவாய்த் துறையில் 9 பேர், ஊரக வளர்ச்சி முகமையில் 36 பேர், வேளாண்மைத் துறையில் 5 பேர், பள்ளிக் கல்வித் துறையில் 20 பேர், சாலை பாதுகாப்பு படையில் 5 பேர், வனத் துறையில் 10 பேர், கால்நடை பராமரிப்புத் துறையில் 13 பேர், மகளிர் திட்டத்தில் 11 பேர், கூட்டுறவுத் துறையில் 3 பேர், சிறுசேமிப்பு அலுவலகம், உணவுப் பாதுகாப்பு பிரிவு, முன்னாள் படைவீரர் நலத் துறை, வருவாய்த் துறை, ஆதிதிராவிடர் நலத் துறை, மருத்துவம், ஊரக நலப் பணிகள், குடும்ப நலத் துறை, பல்வேறு துறைகளைச் சேர்ந்த மொத்தம் 256 பேருக்கு நற்சான்றிதழ்களை ஆட்சியர் அளித்தார்.
50 பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள்: வருவாய்த் துறை சார்பில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 30 பேருக்கு ரூ. 3.60 லட்சம், ஒரு பயனாளிக்கு மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் ரூ. 58 ஆயிரம், வேளாண் துறை சார்பில் 2 பேருக்கு ரூ. 85 ஆயிரம், பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மைத் துறை சார்பில் 4 பேருக்கு ரூ. 17 ஆயிரம், தாட்கோ சார்பில் 13 பேருக்கு ரூ. 11 லட்சம் உள்பட மொத்தம் 50 பேருக்கு ரூ. 16.35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, திண்டல் பிவிபி மெட்ரிக் பள்ளி, கலைமகள் கல்வி நிலையம், கிரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திண்டல் வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விவிசிஆர் செங்குந்தர் மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 800 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஜெ.ஏ.பத்மஜா, ஈரோடு கோட்டாட்சியர் (பொ) ஜெயராமன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரா.நர்மதாதேவி, வட்டாட்சியர் என்.ஆர்.அமுதா உள்பட அரசு துறை அலுவலர்கள், முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சுதந்திர தின விழாவையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் போலீஸார் இரவு, பகலாக கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.