அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த சிறப்பு முகாம்
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள அனுமதியற்ற மனைப் பிரிவுகள் வரன்முறைப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட இந்த முகாமில், கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு முன்னர் கிரயம் பெற்று, அனுமதி பெறாமல் உள்ள மனைகள் வரன்முறைப்படுத்தப்பட்டன. இதில், 68 வீட்டு மனைதாரர்கள் பங்கேற்று ஆன்லைன் மூலமாக வரன்முறைப்படுத்த வேண்டிய மனைகளுக்கான கூராய்வுக் கட்டணம் ரூ. 500 செலுத்திய ரசீது, மனையின் கிரயப்பத்திர நகல் (20.10.2016 க்கு முன் கிரயம்), மனைப் பிரிவு வரைபட நகல், அடையாள அட்டை, சமீபத்தில் பெறப்பட்ட வில்லங்கச் சான்று ஆகியவற்றுடன் அதிகாரிகளிடம் விண்ணப்பித்தனர்.
இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் சீனி அஜ்மல்கான் கூறியதாவது:
ஈரோடு மாநகராட்சியில் 750 அமைப்புத் திட்டம் (லே அவுட்) மூலம் 30 ஆயிரம் வீட்டுமனைகள் அனுமதி பெறாமல் உள்ளன. இந்த மனைகள் வரன்முறைப்படுத்தப்பட்டால்
மாநகராட்சிக்கு ரூ. 50 கோடி வரை வருவாய் கிடைக்கும் சூழ்நிலை உருவாகும். தற்போது நடத்தப்பட்ட முகாமில் விண்ணப்பித்தவர்களில் 10 பேரின் மனைகள் வரன்முறைப்படுத்தப்பட்டதன் மூலம் ரூ. 30 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என்றார்.
முகாமில், உள்ளூர் திட்ட உதவி இயக்குநர் இளங்கோ, மாநகராட்சி அதிகாரி பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.