ஈரோட்டிலிருந்து கேரளத்துக்கு ரூ. 55 லட்சம் மதிப்பில் நிவாரணப் பொருள்கள்
ஈரோடு மாவட்டத்தில் இருந்து 5 லாரிகளில் ரூ. 55 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து 5 லாரிகளில் ரூ. 55 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் கூறியதாவது:
கேரளத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ஈரோடு மாவட்டத்திலிருந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்துக்கு ரூ. 54 லட்சம் மதிப்பில் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காந்திஜி சாலையில் உள்ள மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை, ஈரோடு மாநகராட்சி மண்டபம் ஆகிய இடங்களில் போர்வை, துண்டு, கைலி, பெண்கள், குழந்தைகளுக்கான ஆடைகள், உணவு தயாரிக்கத் தேவைப்படும் பொருள்கள், பால், பிஸ்கெட், மருந்து போன்ற அத்தியாவசியப் பொருள்கள் சேகரிக்கப்பட்டன. வெள்ளிக்கிழமை வரை சேகரிக்கப்பட்ட சுமார் ரூ. 55 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் 5 லாரிகளில் சனிக்கிழமை இரவு கேரளத்துக்கு அனுப்புவதற்காக கோவைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
கோவையில் மாநகராட்சி ஆணையர், பயிற்சி ஆட்சியர் ஆகியோரைக் கொண்ட குழுவினர் நிவாரணப் பொருள்களுடன் வாகனங்களை கேரள மாநிலத்தில் உள்ள அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதில், ஈரோடு சிறகுகள் அமைப்பினர், அனைத்து வணிகர் சங்கத்தினர் போன்றோர் கேரள மாநிலம், வயநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரணப் பொருள்களை வழங்கித் திரும்பி வந்துள்ளனர். ஈரோட்டில் மேற்காணும் இடங்களில் தற்போது நிவாரணப் பொருள்கள் பெறப்படுகின்றன. குறிப்பிட்ட அளவில் பொருள்கள் சேர்ந்தவுடன் உடனடியாக லாரிகளில் அனுப்பிவைக்கப்படும். இந்த வாகனங்களுக்கு சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.