சேற்றில் சிக்கிய அரசுப் பேருந்து: மாணவர்கள் அவதி
மொடக்குறிச்சி அருகே அரசுப் பேருந்து சேற்றில் சிக்கியதால் மாணவ, மாணவிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
மொடக்குறிச்சி அருகே அரசுப் பேருந்து சேற்றில் சிக்கியதால் மாணவ, மாணவிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
ஈரோடு - சிவகிரி செல்லும் அரசுப் பேருந்து தினசரி காலை, மாலை இரண்டு வேளைகளில் ஈரோட்டிலிருந்து சாவடிபாளையம், காட்டுபாளையம், மொடக்குறிச்சி, அவல்பூந்துறை வழியாக பள்ளியூத்து வரை அதன் சுற்று வட்டாரப் பகுதி ஊர்கள் வழியாகச் சென்று அனைத்து மாணவர்களையும் ஏற்றிச் சென்று அரசு, தனியார் பள்ளி வளாகத்தில் இறக்கிவிடுவது வழக்கம்.
அதேபோல, அரசுப் பேருந்து மொடக்குறிச்சி அருகே காட்டுப்பாளையம் வழியாக புதன்கிழமை காலை சென்று கொண்டிருந்தது. அப்பகுதியில் பாலம் வேலை நடைபெற்று வந்ததால் தோட்டத்துக்குள் மாற்றுப் பாதை அமைக்கப்பட்டிருந்தது. அவ்வழியாகச் சென்றபோது அரசுப் பேருந்து சேற்றில் சிக்கிக் கொண்டது.
இதையடுத்து, மாணவ, மாணவிகளை அப்பகுதியிலேயே இறக்கிவிட்டனர். இதில், தனியார் பள்ளி மாணவர்கள் அந்தந்தப் பள்ளி வாகனங்கள் மூலம் பள்ளிக்குச் சென்றனர். அரசுப் பள்ளி மாணவர்கள் சுமார் 2 கி.மீ. தூரம் நடந்தும், பெற்றோர்களை வரவழைத்தும் பள்ளிக்குச் சென்றனர்.
எனவே, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பாலம் வேலை செய்யும் ஒப்பந்ததாரர்கள் முறையான மாற்றுப் பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.