கடம்பூர் தனி ஒன்றியம் குறித்து கருத்துக்கேட்பு கூட்டம்
கடம்பூரைத் தலைமையிடமாக கொண்டு தனி ஒன்றியம் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமையில் கருத்துக் கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கடம்பூரைத் தலைமையிடமாக கொண்டு தனி ஒன்றியம் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமையில் கருத்துக் கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 14 ஒன்றியங்கள் உள்ளன. இதில் கடம்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ஒன்றியம் அமைக்க மலைப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று, தற்போது சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் மலைப் பகுதிகளில் உள்ள ஊராட்சிகளை இணைத்து கடம்பூர் தனி ஒன்றியமாக அறிவிக்கப்பட உள்ளது. மலைப்பகுதியில் மொத்தம் 82 கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மலைப்பகுதி மக்கள் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் பணிகளுக்காக 60.கி.மீ தொலைவில் உள்ள சத்தியமங்கலத்துக்கும், தாளவாடிக்கும் சென்று வருகின்றனர். இதனால், கடம்பூரைத் தலைமையிடமாக கொண்டு ஊராட்சி ஒன்றியம் அமைத்தால் மலைப்பகுதி வளர்ச்சியடைவதோடு, அரசின் திட்டங்கள் நேரடியாக மக்களை சென்றடையும், என்பதால், கடம்பூர், இருட்டிபாளையம், பவளக்குட்டை, கரளையம், குன்றி, கூத்தம்பாளையம் அதேபோல தாளவாடி ஒன்றியத்துக்குள்பட்ட திங்களூர் உள்ளிட்ட ஊராட்சிகளை இணைத்து கடம்பூரை தனி ஒன்றியமாக அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் எஸ். பிரபாகர் தலைமையில் கடம்பூரில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கடம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு கடம்பூர் ஒன்றியத்துடன் இணைக்கும், 7 ஊராட்சிகளில், 8 ஆவதாக அருகியத்தையும் இணைக்க வேண்டும் எனக் கூறினர். இதனை ஆட்சியர் ஏற்றுக்கொண்டார். எந்தவித எதிர்ப்பும் இல்லாமல், மக்களின் கருத்துகள் ஒரு மனதாக ஏற்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் மலையாளிகளுக்கு எஸ்.டி சான்றிதழ் கொடுக்க வேண்டும் என கூறி சுமார் 430 குழந்தைகள் மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்தனர்.
இது குறித்து மாவட்டஆட்சியர் பிரபாகர் தெரிவித்தாவது;
அடர்ந்த வனப்பகுதிகளில் உள்ள கிராமங்களை ஒன்றிணைத்து, புதிய ஒன்றியம் உருவாக்கினால் அதிக அளவு நிதிஒதுக்கி முன்னேற்றம் கொண்டு வரமுடியும். மலையாளிகளுக்கு எஸ்.டி சான்றிதழுக்கான அனைத்துப் பணிகளும் முடிந்து அரசு ஆணைக்காக காத்திருக்கிறோம். அரசு ஆணை கிடைத்ததும் இவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் பணியை துவக்குவோம் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.