கோபிசெட்டிபாளையம் ஒன்றியத்தில் ஆட்சியர் ஆய்வு
கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் புதன்கிழமைஆய்வு மேற்கொண்டார்.
கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் புதன்கிழமைஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட குள்ளம்பாளையம், நஞ்சைகோபி, கடுக்காம்பாளையம் ஆகிய பகுதிகளில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் ஆய்வு செய்தார்.
குள்ளம்பாளையத்தில் விவசாயி தோட்டத்தில் 0.54 ஹெக்டேர் பரப்பளவில் ரூ. 40,500 மானியத்தில் பயிரிட்டுள்ள கதலி இன வாழை மரங்கள், நஞ்சை கோபியில் விவசாயிக்கு மானியம் ரூ.75 ஆயிரம் வழங்கப்பட்டுள்ள மினி டிராக்டர், மற்றொரு விவசாயி தோட்டத்தில் வாழை, தர்பூசணி சாகுபடி , தேனீ வளர்ப்பு முறை மற்றும் சேகரிக்கும் முறை ஆகியவற்றை பார்வையிட்டார்.
அடர்வனம் பகுதியில் இயற்கை முறையில் பயிரிடப்பட்டுள்ள 65 வகையான மரங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடுக்காம்பாளையத்தில் பாக்கு தோட்டத்தையும், மரவள்ளி கிழங்கு பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
ஈரோடு மாவட்டத்தில் 40 ஆயிரத்து 658 ஹெக்டேர் பரப்பளவில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடிப் பரப்பினை ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு திட்டங்கள் மூலம் நவீனத் தொழில்நுட்பங்களான பாதுகாக்கப்பட்ட சாகுபடி முறைகள் பின்பற்றப்படுகிறது.
பசுமைக்குடில், நிழல் வலைக்கூடம், மண்புழு உரக்கூடம், வெங்காய சேமிப்பு கூடம், சிப்பம் கட்டும் அறை போன்ற நவீன தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி விவசாயிகள் தரமான விளை பொருள்கள், உயர் விளைச்சல் மற்றும் அதிக வருமானம் பெற்றிட பல்வேறு மானிய உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பிரதம மந்திரி விவசாயி நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் தற்போதுள்ள பருவநிலை மாற்றங்களினால் ஏற்படும் வறட்சியிலும், குறைந்த நீரிலும் தரமான மற்றும் உயர் விளைச்சல் பெற்றிட தோட்டக்கலைப் பயிர்களுக்கு நுண்ணீர் பாசனம் அமைத்திட சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. மேலும் நுண்ணீர் பாசன கருவிகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரியினை அரசே ஏற்றுள்ளது.
இத்திட்டமானது நடப்பாண்டில் பெருந்துறை, சத்தியமங்கலம், பவானி, அந்தியூர், நம்பியூர், மொடக்குறிச்சி ஆகிய வட்டாரங்களில் செயல்படுத்தப்படவுள்ளது.
கூட்டுப்பண்ணைய திட்டம் மூலம் விவசாயிகளை ஒருங்கிணைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி தொழில் முனைவோராக்கும் குறிக்கோளுடன் 10 உழவர் உற்பத்தியாளர் குழுக்களை இணைத்து ஒரு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 2018-19 ஆம் நிதியாண்டுக்கு பல்வேறு திட்டத்தின் கீழ் ரூ. 38.53 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
ஆய்வின்போது தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பி.தமிழ்ச்செல்வி, உதவி இயக்குநர் குணசேகரன், தோட்டக்கலை அலுவலர்கள் சசிகலா, சாந்தி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.