கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் வழுக்கு மர விளையாட்டு
கோகுலாஷ்டமி விழாவையொட்டி, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில் திரளான இளைஞர்கள் வழுக்கு மரம் ஏறி சாகசம் செய்தனர்.
கோகுலாஷ்டமி விழாவையொட்டி, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில் திரளான இளைஞர்கள் வழுக்கு மரம் ஏறி சாகசம் செய்தனர்.
திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு விழா மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளிய உற்சவர் கஸ்தூரி அரங்கநாதர், கோகுல கிருஷ்ணருக்கு திருமஞ்சனம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை, மஹா தீபாராதனை, ஊஞ்சல் உற்சவம் போன்ற வைபவங்கள் நள்ளிரவு 12 மணி வரை நடைபெற்றன.
வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, 25 அடி உயரமுள்ள தேக்குமரக் கம்பத்தில் உளுந்து உள்ளிட்ட வழுக்கும் தன்மையுள்ள உணவுப் பொருள்களை அறைத்துப் பூசி பெருமாள் கோயில் வாசலில் நடப்பட்டது. தொடர்ந்து, இரவு 9.30 மணியளவில் வழுக்குமரம் ஏறும் போட்டி தொடங்கியது. அணி அணியாக வந்த இஞைர்கள் வழுக்கு மரத்தைக் கட்டிப்பிடித்து ஒருவர் மீது ஒருவர் ஏறி உச்சியைத் தொட முயன்றனர். வேடிக்கைப் பார்த்த இளைஞர்கள், சிறுவர்கள் வழுக்கு மரம் ஏறும் இளைஞர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். இதன் காரணமாக மரத்தின் பாதிவரை சென்ற இளைஞர்கள் தரைக்கு வர நேரிட்டது. சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மரப்பாலம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் வழுக்கு மரத்தின் உச்சிக்குச் சென்று மஞ்சள் துணியை எடுத்தனர். உச்சியில் கட்டியிருந்த இனிப்பு பதார்த்தங்களை எடுத்து பொதுமக்கள் மத்தியில் வீசி எறிந்தனர். அதன்பிறகு, கீழே இறங்கிய இளைஞருக்கு மாலை அணிவித்து பட்டாச்சாரியார்கள் மரியாதை செய்தனர். அதைத் தொடர்ந்து சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கஸ்தூரி அரங்கநாதர் மலர் சப்பரத்தில் காட்சியளித்தார். ஈஸ்வரன் கோயில் வீதி, மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பூங்கா, பிரப் சாலை, காமராஜர் வீதி வழியாகச் சென்று இரவு 12 மணியளவில் கோயிலில் நிறைவடைந்தது. இதில், ஈரோடு மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.