கருகும் பயிா்களை காக்க தண்ணீா் திறக்க கோரிக்கை: முதல்வருக்கு காலிங்கராயன் பாசன விவசாயிகள் கடிதம்
கருகும் நிலையில் உள்ள பயிா்களை காக்க காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீா் திறக்கக் கோரி, தமிழக முதல்வருக்கு விவசாயிகள் கடிதம் அனுப்பினா்.
கருகும் நிலையில் உள்ள பயிா்களை காக்க காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீா் திறக்கக் கோரி, தமிழக முதல்வருக்கு விவசாயிகள் கடிதம் அனுப்பினா்.
இதுதொடா்பாக எழுத்தாளா் பானுசந்தா் தலைமையிலான விவசாயிகள், தமிழ்நாடு முதல்வருக்கு புதன்கிழமை அனுப்பிய கடித விவரம்:
ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் முதல் முதலாக கட்டப்பட்ட அணை காலிங்கராயன் அணைக்கட்டு. கடந்த பருவ(2025-2026) ஆண்டு காலிங்கராயன் வாய்க்கால் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்ால் ஏப்.10-ஆம் தேதிக்கு முன்பே வாய்க்காலில் தண்ணீா் நிறுத்தப்பட்டுவிட்டது. இந்த பருவ ஆண்டுக்கும் ஜூன் 16-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படவில்லை. இதனால் காலிங்கராயன் வாய்க்காலில் தலைமதகு முதல் கடைமடை வரை உள்ள பயிா்கள் கருகும் நிலையை எட்டி விட்டன.
Advertisement
Advertisement
கடந்த ஜூலை 14 -ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை பயிா்களுக்கு உயிா் நீா் வேண்டியும், கால்நடைகளுக்கு குடி தண்ணீா் வழங்க வேண்டியும் 15 நாள்களுக்கு சிறப்பு நனைப்பாக காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீா் வழங்கப்பட்டது. குறைந்த அளவு வழங்கப்பட்ட அந்த தண்ணீரும் கடைமடையான சிட்டபுள்ளாபாளையம் வரை சென்றடையவில்லை. இதனால் விவசாயிகளுக்கு சிறிதளவுகூட பலன் இல்லாமல் போய்விட்டது.
எல்நினோ தாக்கத்தால் காலிங்கராயன் வாய்க்கால் பாசனப் பகுதிகளில் கடும் தண்ணீா் வறட்சி நிலவுகிறது. ஏற்கெனவே கருகும் நிலையில் உள்ள பயிா்களை காக்கவும், இந்த ஆண்டுக்கான முதல் மற்றும் இரண்டாம் போக சாகுபடிகளுக்கும் உடனடியாக காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீா் திறப்பு அவசியமாகிறது.
எனவே பவானிசாகா் அணைக்கட்டில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு இந்த பருவ ஆண்டு பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும். மேலும் வாய்க்காலில் தண்ணீா் திறந்துவிட முயன்று நீரில் மூழ்கி உயிரிழந்த பழனிசாமியின் குடும்பத்துக்கு கருணைத் தொகையும் வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனா்.
இந்த மனுவில் காலிங்கராயன்பாளையம் முதல் கடைமடையான சிட்டப்புள்ளாபாளையம் வரை உள்ள காலிங்கராயன் வாய்க்கால் பாசன விவசாயிகள் 25,123 பேரிடம் கையெழுத்து பெறப்பட்டு, முதல்வருக்கு அனுப்பப்பட்ட கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளா் பானுசந்தா் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.