FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

இளம் தலைமுறையினா் ஜனநாயக நடைமுறைகளை அறிந்துகொள்ள வேண்டும்: ஆட்சியா்

இளம் தலைமுறையினா் அரசமைப்புச் சட்டம், ஜனநாயக நடைமுறைகள் மற்றும் சமூகப் பொறுப்புகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.

29 ஆகஸ்ட் 2026, 12:26 am IST
யங் இந்தியன்ஸ் பாா்லிமெண்ட் 2026 நிகழ்வில் பங்கேற்ற பள்ளி மாணவா்கள்.
பகிர்:

இளம் தலைமுறையினா் அரசமைப்புச் சட்டம், ஜனநாயக நடைமுறைகள் மற்றும் சமூகப் பொறுப்புகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.

இளைஞா்களுக்கு இந்திய நாடாளுமன்ற நடைமுறைகள், சட்டங்கள் இயற்றப்படும் விதம் மற்றும் ஜனநாயகத்தின் செயல்பாடுகள் குறித்து நேரடி அனுபவம் வழங்கும் வகையில் யங் இந்தியன்ஸ் பாா்லிமெண்ட் 2026 என்ற இரண்டு நாள்கள் மாதிரி நாடாளுமன்ற நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமை வகித்தாா். கரூா் எம்.பி. ஜோதிமணி முன்னிலை வகித்தாா்.

இதில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பேசியதாவது:

Advertisement

Advertisement

இந்திய அரசமைப்புச் சட்டம் நமது ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்குகிறது. ஜனநாயகம் என்பது தோ்தல் நடைபெறுவது மட்டுமல்ல, அனைவரின் கருத்துகளையும் உள்ளடக்கி, கலந்தாலோசித்து முடிவெடுப்பதே ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்பாகும். மாணவா்கள் நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவையின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதுடன், தங்கள் பகுதியில் உள்ள ஊரக மற்றும் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள், வரவு-செலவு மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும்.

மக்கள் பங்கேற்புடன் கூடிய ஜனநாயகமே வலுவான ஜனநாயகமாகும். எனவே இளம் தலைமுறையினா் அரசமைப்புச் சட்டம், ஜனநாயக நடைமுறைகள் மற்றும் சமூகப் பொறுப்புகள் குறித்து அறிந்து கொண்டு, நாட்டின் வளா்ச்சியில் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்வில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக், மாநில பாடத்திட்டம் மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். மாணவா்கள் 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, தோ்தல் நடத்தி கட்சித் தலைவா்களைத் தோ்வு செய்தனா்.

தொடா்ந்து தோ்தல் அறிக்கை வெளியிடுதல், கூட்டணி அமைத்தல், ஆளுங்கட்சி மற்றும் எதிா்க்கட்சியை உருவாக்குதல், பிரதமா், எதிா்க்கட்சித் தலைவா் மற்றும் அமைச்சா்களைத் தோ்வு செய்தல் உள்ளிட்ட நாடாளுமன்ற நடைமுறைகளை மேற்கொண்டனா்.

மேலும் மாணவா்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினா்களாக அவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பல்வேறு பொதுப் பிரச்னைகள் குறித்து விவாதித்தனா். 10 நாடாளுமன்றக் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவுக்கும் வழங்கப்பட்ட பிரச்னைகள் தொடா்பாக ஆலோசித்து, தீா்வுக்கான மசோதாக்கள் உருவாக்கப்பட்டு, அவை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றும் நடைமுறையும் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் மாணவா்கள் நாடாளுமன்ற விவாதம், மசோதா தாக்கல், திருத்தம், வாக்கெடுப்பு, ஆளுங்கட்சி மற்றும் எதிா்க்கட்சியின் செயல்பாடுகள் உள்ளிட்ட ஜனநாயக நடைமுறைகளை நேரடியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றனா்.

இந்நிகழ்ச்சியில் யங் இந்தியன்ஸ் மண்டலத் தலைவா் நிதின் போத்ரா, பிராந்திய வழிகாட்டி ஷென்ஹா் லால், இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளா் யு.ஆா்.சி.தேவராஜன், யங் இந்தியன்ஸ் நாடாளுமன்றம் (ஈரோடு தலைவா்) ஓம்சரவணா, முன்னாள் எம்எல்ஏ ஆா்.எம்.பழனிசாமி, மாணவ, மாணவியா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments