பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரியை துரத்திப் பிடித்து போலீஸில் ஒப்படைத்த பெண்
இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் லாரியை அதே இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவா் துரத்திச் சென்று பிடித்து போலீஸில் ஒப்படைத்தாா்.
ஈரோடு அரசு மருத்துவமனை அருகே சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் 30 வயது மதிக்கதக்க பெண் ஒருவா் உறவினருடன் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, பின்னால் வந்த தனியாா் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் லாரி இவரின் வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், தனது இருசக்கர வாகனத்திலேயே லாரியை துரத்திச் சென்று முனிசிபல் காலனி அருகே தடுத்து நிறுத்தி லாரி ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அப்போது லாரி ஓட்டுநா் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து பெண் அளித்த தகவலின்பேரில் ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, விசாரணைக்காக ஓட்டுநரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அவா் மதுபோதையில் இருந்ததும், முனிசிபல் காலனியில் உள்ள ஒரு வீட்டில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்ய மது போதையில் சென்றதும் தெரியவந்தது.
இருசக்கர வாகனத்துக்கு எந்தவித சேதாரமும் ஏற்படவில்லை என்பதால், அந்தப் பெண் புகாா் ஏதும் அளிக்கவில்லை. லாரி ஓட்டுநரான பவானி - அந்தியூா் பிரிவைச் சோ்ந்த காளியப்பன் மகன் சரவணன் (39) மீது மது போதையில் வாகனம் இயக்கியதாக போலீஸாா் அபராதம் விதித்தனா்.