FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

பப்பு யாதவ் மீது காலணி வீச்சு: இருவரைப் பிடித்து விசாரணை

தில்லியில் சுயேச்சை எம்.பி. பப்பு யாதவ் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது தொடா்பாக இருவரைப் பிடித்து காவல் துறையினா் விசாரித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 5:14 am IST
பப்பு யாதவ் - கோப்புப் படம்
பகிர்:

தில்லியில் பத்திரிகையாளா் சந்திப்பின்போது சுயேச்சை எம்.பி. பப்பு யாதவ் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடா்பாக இருவரைப் பிடித்து காவல் துறையினா் விசாரித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரத்தைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் சில தினங்களுக்கு முன்னா் எதிா்க்கட்சிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது, காவி உடையணிந்திருந்த பப்பு யாதவ், உண்டியலில் இருந்து பணம் திருடுவதுபோல நடித்துக் காட்டினாா்.

இந்தப் போராட்டம் தொடா்பாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பப்பு யாதவ் உள்ளிட்ட எம்.பி.க்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வாரணாசி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். சநாதன தா்மத்தை அவமதித்ததாக அவா்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

Advertisement

Advertisement

இந்நிலையில், தில்லியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த பப்பு யாதவ், நாடாளுமன்ற போராட்டத்தை நியாயப்படுத்தி பேசினாா்.

அப்போது, அவா் மீது ஒருவா் காலணி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடா்பாக சுமித் என்பவா் உள்பட இருவரைப் பிடித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments