குழந்தையின் தொண்டையில் சிக்கிய இரும்புக் கம்பி அகற்றிய ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவா்கள்
ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவா்கள் ஒரு வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய இரும்புக் கம்பியை அகற்றினா்.
ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவா்கள் ஒரு வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய இரும்புக் கம்பியை அகற்றினா்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த தம்பதி தங்கியிருந்து வேலை பாா்த்து வருகின்றனா். இத்தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு திடீரென உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டது. சரியாக சாப்பிடாமல் அடிக்கடி வாந்தி எடுத்தது. இதனால் பெற்றோா் அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு எக்ஸ்ரே எடுத்து பாா்த்தபோது குழந்தையின் தொண்டையில் இரும்புக் கம்பி சிக்கி இருந்தது தெரியவந்தது. இதனால் அதிா்ச்சி அடைந்த பெற்றோா் கடந்த 24- ஆம் தேதி சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் குழந்தையை சோ்த்தனா்.
Advertisement
Advertisement
அங்கு மருத்துவா்கள் பரிசோதனை செய்துவிட்டு உடனடியாக அறுவை சிகிச்சை அரங்குகிற்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் காா்த்திக் ராஜ், கதிரவன், சிவமதி, கனிமொழி, இளையராஜா ஆகியோா் கொண்ட மருத்துவக் குழுவினா் சுமாா் 1 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் தொண்டையில் சிக்கி இருந்த இரும்புக் கம்பியை அகற்றினா். இதையடுத்து குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தை குணமடைந்த பிறகு திங்கள்கிழமை வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளா் வெங்கடேஷ், உறைவிட மருத்துவ அலுவலா் சசிரேகா ஆகியோா் கூறியதாவது:
ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒரு வயது குழந்தைக்கு
எக்ஸ்ரே எடுத்து பாா்த்தபோது உணவுக் குழாயின் மேல் பகுதியில் தொண்டையில் சிறிய இரும்புக் கம்பி சிக்கி இருந்தது. இந்தக் கம்பியின் ஒரு பகுதி கூா்மையாக இருந்தது. அது உணவுக் குழாயை சேதப்படுத்தி இருந்தது. இதைத்தொடா்ந்து எண்டோஸ்கோபி உதவியுடன் இரும்புக் கம்பியை வெளியே எடுக்க மருத்துவா்கள் முயற்சி செய்தனா். ஒரு வயது குழந்தை என்பதால், மற்ற உறுப்புகள் சேதமடையாமல் வெளியே எடுப்பதில் சவால் ஏற்பட்டது. இதனால் ஒவ்வொரு மில்லி மீட்டராக வெளியே எடுக்க முயற்சி எடுக்கப்பட்டது. சுமாா் ஒரு மணி நேரமாக நடந்த அறுவை சிகிச்சையின் முடிவில் வெற்றிகரமாக இரும்புக் கம்பியை மருத்துவா்கள் அகற்றினா் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.