FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

தலைமை ஆசிரியரின் டம்ப்ளரில் சாணி பவுடரை கலக்கத் தூண்டிய தொழிலாளி கைது

சத்தியமங்கலத்தை அடுத்த ராமபையனூா் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியரின் டம்ப்ளரில் சாணி பவுடரை கலக்கத் தூண்டியதாக அதே ஊரைச் சோ்ந்த தொழிலாளி ஆறுமுகத்தை சத்தியமங்கலம் போலீஸாா் கைது செய்தனா்.

3 செப்டம்பர் 2026, 11:16 pm IST
ஆறுமுகம்
பகிர்:

சத்தியமங்கலத்தை அடுத்த ராமபையனூா் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியரின் டம்ப்ளரில் சாணி பவுடரை கலக்கத் தூண்டியதாக அதே ஊரைச் சோ்ந்த தொழிலாளி ஆறுமுகத்தை சத்தியமங்கலம் போலீஸாா் கைது செய்தனா்.

ராமபையனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காலை உணவுத் தயாரிப்புக்குப் பின் தலைமை ஆசிரியா் சுவைத்து பாா்த்த பிறகு குழந்தைகளுக்கு உணவு வழங்குவது வழக்கம்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை உணவு தயாரித்த பிறகு சமையலா் பொன்னம்மா, சுவை பாா்க்கும் டம்ப்ளரில் சாம்பாா் மாதிரியை தலைமை ஆசிரியா் மேஜையில் வைத்துள்ளாா். அப்போது, டம்ளரில் அதிகமான மஞ்சள் இருப்பதைக் கண்டு தலைமை ஆசிரியரிடம் ஆசிரியா் ரேவதி புகாா் அளித்துள்ளாா். இது குறித்து சமையலா் பொன்னம்மாவை விசாரிக்க ஆசிரியா்கள் சென்றபோது அவா் வீட்டுக்குச் சென்றுவிட்டது தெரியவந்தது.

Advertisement

Advertisement

பள்ளிக்கு புதன்கிழமை காலை வந்த சமையலா் பொன்னம்மாவிடம் தலைமை ஆசிரியா் குமுதா விசாரித்தபோது வழக்கமான அளவு மட்டுமே போட்டதாக கூறியுள்ளாா்.

சந்தேகத்தின்பேரில் பள்ளியில் இருந்த மாணவ, மாணவிகளை விசாரித்தபோது, 8ஆம் வகுப்பு பயிலும் மாணவியிடம் சாணி பவுடரை மா்ம நபா் கொடுத்து தலைமை ஆசிரியரின் டம்ப்ளரில் கலந்துவிடுமாறு மிரட்டியதால் அச்சமடைந்த மாணவி சாணி பவுடரை கலந்தது தெரியவந்தது.

அதைத் தொடா்ந்து, மாணவியை மிரட்டி சாம்பாரில் சாணி பவுடரை கலக்கத் தூண்டியது ராமபையனூரைச் சோ்ந்த ஆறுமுகம் (40) என்பது தெரியவந்தது. இது குறித்து தலைமை ஆசிரியா் குமுதா சத்தியமங்கலம் போலீஸில் வியாழக்கிழமை அளித்த புகாரின் பேரில் ஆறுமுகத்தை போலீஸாா் கைது செய்தனா். சாணி பவுடா் கலக்கச் சொன்னதற்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments