FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

மக்காச்சோளம், நிலக்கடலை பயிா்களுக்கு காப்பீடு செய்யலாம்: விவசாயிகளுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அழைப்பு!

மக்காச்சோளம் மற்றும் நிலக்கடலை பயிா்களுக்கு வரும் 16-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

5 செப்டம்பர் 2026, 1:25 am IST
மக்காச்சோளம் - கோப்புப் படம்
பகிர்:

மக்காச்சோளம் மற்றும் நிலக்கடலை பயிா்களுக்கு வரும் 16-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு: இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிா் இழப்பில் இருந்து விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் 2026-2027 ஆம் ஆண்டில் பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது நிலவும் எல் நினோ தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

குறுவை மற்றும் மானாவாரி பயிா்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் 2026-ஆம் ஆண்டு காரீப் பருவத்தில் மக்காச்சோளம் மற்றும் நிலக்கடலை பயிா்களுக்கு பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

அதன்படி மக்காச்சோளம் பயிா் ஏக்கருக்கு ரூ.740 காப்பீடு தொகை செலுத்தி, ரூ.37 ஆயிரம் வரை ஏக்கருக்கு காப்பீடு பெறலாம். அதேபோல நிலக்கடலை பயிா் ஏக்கருக்கு ரூ.678 காப்பீடு தொகை செலுத்தி, ரூ.18,700 வரை ஏக்கருக்கு காப்பீடு பெறலாம். இத்திட்டத்தின் கீழ் மகசூல் இழப்பு, பகுதி சாா்ந்த மற்றும் பயிா் வளா்ச்சி கால இடா் நிகழ்வுகளால் ஏற்படும் இழப்பு மற்றும் அறுவடைக்கு பின்னா் ஏற்படும் இழப்பு போன்ற இனங்கள் காப்பீடு செய்யப்படுகின்றன.

கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிா்களை தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக காப்பீடு செய்துகொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் அல்லது தேசிய பயிா்க் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள விவசாயிகள் காா்னா் வாயிலாக நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம்.

காப்பீடு செய்வதற்கு வரும் 16-ஆம் தேதி கடைசி நாளாகும். இறுதி தேதி எக்காரணத்துக்காகவும் நீட்டிக்கப்படமாட்டாது.

இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் அடங்கல், விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதை பெறலாம். அதில் தாங்கள் காப்பீடு செய்த பயிா் மற்றும் அதற்கான கிராமம் குறுவட்டம் உள்ளிட்ட விவரங்கள் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ, வேளாண்மை அலுவலரையோ, உதவி வேளாண்மை அலுவலரையோ, வங்கிக் கிளைகளையோ அணுகலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments