நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் ஆராய்ச்சித் துறையில் பல்வேறு அற்புதங்களை விளைவிக்கும்: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் பேட்டி
நியூட்ரினோ ஆய்வுத் திட்டமும், நியூட்ரினோ ஆய்வும் எதிர்காலத்தில் ஆராய்ச்சித் துறையில் பல்வேறு
நியூட்ரினோ ஆய்வுத் திட்டமும், நியூட்ரினோ ஆய்வும் எதிர்காலத்தில் ஆராய்ச்சித் துறையில் பல்வேறு அற்புதங்களை விளைவிக்கும் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் சுபிர் சர்க்கார் தெரிவித்தார்.
காஸ்மிக் கதிர்கள் ஆய்வகம் சார்பில் உதகையில் திங்கள்கிழமை நடைபெற்ற காஸ்மிக் கதிர்கள் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்பதற்காக நீலகிரிக்கு வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காஸ்மிக் கதிர்கள் குறித்த ஆய்வுகள் கடந்த 100 ஆண்டுகளாகத்தான் வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது. இத்துறையில் தற்போது பல்வேறு புதிய ஆராய்ச்சிகளும் உருவாகியுள்ளன. இந்த ஆராய்ச்சியில் இந்தியாவிலேயே உதகை முக்கிய பங்கு வகிக்கிறது. துகள்கள் புவிக்கு வருவது கண்டறியப்பட்ட பின்னர் புவியில் அவற்றிற்கு என்ன நடக்கிறது என்பதே இத்தகைய ஆராய்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
வளி மண்டலத்துக்கு மேல் உள்ள பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆனால், இவற்றில் இதுவரையிலும் எத்தகைய முடிவுகளும் காணப்படவில்லை. புதிய கண்டுபிடிப்புகளை வைத்து நடைமுறையில் செயலாக்கும்போதுதான் அவை குறித்து உறுதியான முடிவுக்கு வர முடியும். அப்போதுதான் அவை மனிதர்களின் வெற்றிக்கும் பயன்படும்.
நியூட்ரினோ ஆராய்ச்சி உலகெங்கும் பிரபலமானதாகும். நியூட்ரினோ ஆராய்ச்சியில் அண்மையில் பிளேசர் போன்று பல்வேறு புதிய விஷயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. நியூட்ரினோ துகள்களை ஒரே இடத்தில் குவியச் செய்து அவற்றின் மூலம் பூமிக்கடியில் உள்ள கனிம வளங்களைக் கண்டறிய முடியும். இத்தகைய ஆராய்ச்சிகளை பூமிக்கு மேல் நடத்த முடியாது என்பதாலேயே மலைப் பகுதிகளில் பூமிக்கு அடியில் நடத்தப்படுகிறது.
இத்திட்டத்துக்கு நீலகிரி மாவட்டம்தான் முதலில் தேர்வு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அங்கு எழுந்த எதிர்ப்பின் காரணமாக தற்போது இத்திட்டம் தேனி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இத்திட்டத்தால் தேனி பகுதியில் கதிர்வீச்சு அபாயமுள்ளதாக வெளியாகும் தகவல்கள் தவறானவையாகும். நியூட்ரினோ என்பது எடையில்லா விண் துகள்களாகும். இவற்றால் எத்தகைய பாதிப்பும் ஏற்படாது. கனடா நாட்டில் இத்தகைய ஆராய்ச்சிக்கு பெரும் வரவேற்பு உள்ளது. அங்கு இந்த ஆராய்ச்சி நடைபெறும் பகுதியைச் சுற்றிலும் பெரிய நகரங்களே உருவாகியுள்ளன. அதனால் நியூட்ரினோ குறித்த அச்சத்தை மக்களிடையே போக்க வேண்டும். இத்தகைய ஆராய்ச்சிகளை மேலும் அதிகரிக்க வேண்டும்.
அதேபோல, ஈர்ப்பு விசை தொடர்பான ஆராய்ச்சிகளும் அதிகரிக்கப்பட வேண்டும். இத்தகைய ஆராய்ச்சிகளின் மூலமாகத்தான் நாம் வாழும் பூமி உருவானதைக் குறித்து அறிந்து கொள்ள முடியும்.
நியூட்ரினோ ஆராய்ச்சித் திட்டம் எதிர்காலத்தில் பல்வேறு அற்புதங்களை விளைவிக்கும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.