சாலையில் நடமாடும் காட்டெருமைகள்: அச்சத்தில் மக்கள்
மஞ்சூர் பகுதியில் சாலையில் நடமாடும் காட்டெருமைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மஞ்சூர் பகுதியில் சாலையில் நடமாடும் காட்டெருமைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மஞ்சூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வனப் பகுதியினுள் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள குளம், குட்டைகள் அனைத்தும் வற்றியுள்ளன. இதனால் போதிய உணவின்றித் தவிக்கும் வன விலங்குகள் தண்ணீர், உணவு தேடி வனத்தை விட்டு வெளியேறுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக காட்டெருமைகள் அவ்வப்போது குடியிருப்பு, தேயிலைத் தோட்டம், விளை நிலங்களுக்கு வந்து செல்வதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பகல் மட்டுமின்றி இரவு நேரத்திலும் கூட்டம் கூட்டமாக நடமாடும் காட்டெருமைகளை விவசாயிகள் தனித்தனிக் குழுக்களாகச் சென்று விரட்டி வருகின்றனர். இருப்பினும் ஒரு சில இடங்களில் காட்டெருமைகள் பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன.
இதனிடையே மஞ்சூர் அருகே உள்ள முள்ளிமலை, கெத்தை, பெங்கால்மட்டம், கைகாட்டி, தாய்சோலை, சாம்ராஜ், மைநிலை மட்டம், தேவர்சோலை, தங்காடு, எம்.பாலடா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வரும் நிலையில் குட்டிகளுடன் வரும் காட்டெருமைகள் கூட்டம், தேயிலைத் தோட்டத்துக்குள் முகாமிட்டு அங்குள்ள செடிகளை சேதப்படுத்தி வருகின்றன.
இதில் வயது முதிர்ந்த ஒற்றை காட்டெருமை அவ்போது சாலையின் குறுக்கே நிற்பதால் வாகன ஓட்டிகள் பீதியடைந்து வருகின்றனர்.
மேலும், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், நடக்க இயலாமல் அவ்வப்போது அலறி வரும் காட்டெருமைகளும் அருகே உள்ள மரம், கட்டடத்தில் மோதி தனது ஆவேசத்தை தனித்துக் கொள்கின்றன. இதனால் அந்த வழியாக தேயிலைத் தோட்டத்துக்குச் செல்லும் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடந்து செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பிரச்னை குறித்து வனத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.