முகப்பு
நீலகிரி

தொட்டபெட்டா செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை: சாலையில் மரங்கள் விழுந்ததால் நடவடிக்கை

மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், தொட்டபெட்டா செல்வதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

Updated On : 29 ஜூலை 2024, 2:31 am IST
தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்லும் சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.
பகிர்:

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், தொட்டபெட்டா செல்வதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தடை விதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மூன்று வாரங்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், கடந்த மூன்று நாள்களாக மழையின் தீவிரம் குறைந்து, சூறாவளிக் காற்று வீசி வருகிறது. இதனால், ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளதுடன், மரங்களும் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உதகை பெட்டையாலைன்  பகுதியில்  வீடு மற்றும் கடை மீது ராட்சத மரம் வேரோடு சாய்ந்தது. என்றாலும், அதிா்ஷ்டவசமாக வீட்டிலிருந்தவா்கள் உயிா்தப்பினா்.

Advertisement

Advertisement

உதகை - குந்தா நெடுஞ்சாலையில் ஐந்து மரங்கள் வேரோடு சாய்ந்ததால்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல, தொட்டபெட்டா காட்சி முனை செல்லும் சாலையிலும் ஞாயிற்றுக்கிழமை மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

~தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்லும் சாலையில் விழுந்துகிடக்கும் மரம்.

மலை ரயில் ரத்து:

உதகை - குன்னூா் மலை ரயில் பாதையில் காற்று காரணமாக மரக்கிளைகள், கற்கள் விழுந்ததால் ரயில் பாதை சேதமடைந்தது. இதனால், மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை குன்னூரோடு நிறுத்தப்பட்டு, குன்னூா் - உதகை இடையே ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, ரயலில் பயணித்த 180 சுற்றுலாப் பயணிகள் 3 அரசுப் பேருந்துகள் மூலம் உதகைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.