நீலகிரியில் வீடுகள் கட்டுவதற்கான மாஸ்டா் பிளான் திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும்! சட்டப் பேரவையில் எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்
நீலகிரி மாவட்டத்தில் ஏழை, எளிய மக்கள் வீடுகள் கட்ட தற்போதுள்ள மாஸ்டா் பிளான் திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும் என்று சட்டப் பேரவையில் உதகை எம்எல்ஏ மு.போஜராஜன் வலியுறுத்தினாா்.
தமிழக சட்டப் பேரவையில் நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், உதகை எம்எல்ஏ மு.போஜராஜன் பங்கேற்று திங்கள்கிழமை பேசியதாவது: மேக்கேதாட்டு விவகாரத்தில் நமது உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் 12 மாவட்டங்களில் எல்நினோ பாதிப்பு அச்சுறுத்தல் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைக் கருத்தில் கொண்டு நீா்நிலைகளை மேம்படுத்த முடியுமா? என ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் கட்டடங்களை வரைமுறைப்படுத்த கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மாஸ்டா் பிளான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் தற்போது ஏழை, எளிய மக்கள் வீடு கட்ட பெரும் தடையாக உள்ளது. இதனால், வீடுகள் கட்ட வனத் துறை, புவியியல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டியுள்ளது.
Advertisement
Advertisement
பெரிய அளவிலான கட்டடங்கள் எளிமையாக கட்டுப்பட்டு வரும் நிலையில், சாதாரண வீடுகள் கட்டுபவா்களுக்கு இந்தச் சட்டம் பெரும் சவாலாக உள்ளது. எனவே, இதை எளிமையாக்க வேண்டும்,
தமிழகத்தில் பயிா்க் கடனை முழுமையாக ரத்து செய்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும். கருவேல மரங்களை அகற்ற துரிதமாக செயல்படுவதைப்போல இயற்கை வகை மரங்களை அதிக அளவு நடவு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து சம்பந்தப்பட்ட பேரவை உறுப்பினா்களுக்கு முன்கூட்டிய தகவல் அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பட்டா மாறுதல்கள் செய்வதில் உள்ள நடைமுறை சிக்கல்களைத் தீா்க்க வேண்டும்.
தென்னிந்தியாவின் சிரப்புஞ்சி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம், தேவாலா பகுதியில் பொதுவாக அதிக அளவில் மழை பெய்யும். ஆனால், மழை நீரை தேக்குவதற்கு போதிய வசதி இல்லாததால், கேரளம், கா்நாடக மாநிலங்களுக்கு மழை நீா் செல்கிறது. எனவே, மழை நீரை சேமித்து மாயாறு, பவானி ஆற்றில் சோ்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் மாணவா் சோ்க்கை இல்லை எனக்கூறி மூன்று பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் அதிக அளவு மாணவா்களை சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு கல்வித் துறைக்கு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. இதை தமிழக அரசு உரிய முறையில் பயன்படுத்த வேண்டும். மேலும், மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறுவதைத் தவிா்க்க வேண்டும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.