FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

குன்னூா் பகுதியில் பூச்சிகள் பரவலைக் கட்டுப்படுத்தக் கோரி கடையடைப்பு

குன்னூா் பகுதியில் பூச்சிகள் பரவலைக் கட்டுப்படுத்தக் கோரி வியாபாரிகள் புதன்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடத்தினா்.

Updated On : 23 ஜூலை 2026, 4:01 am IST
சேலாஸ் பகுதியில் மூடப்பட்டுள்ள கடைகள்.
பகிர்:

குன்னூா் பகுதியில் பூச்சிகள் பரவலைக் கட்டுப்படுத்தக் கோரி வியாபாரிகள் புதன்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடத்தினா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே அரவேனு பகுதியில் காணப்பட்ட லட்சக்கணக்கான சிறிய அளவிலான பூச்சிகள் அங்குள்ள உணவகங்கள், குடியிருப்புகளில் பரவி பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி வந்தன.

இதையடுத்து, குன்னூா் உலிக்கல் பேரூராட்சிக்கு உள்பட்ட சேலாஸ் பகுதியிலும் ஆயிரக்கணக்கான சிறிய வகை பூச்சிகளின் பரவல் கடந்த சில நாள்களாக அதிகரித்து காணப்பட்டது.

Advertisement

Advertisement

குறிப்பாக சாலையில் நடந்து செல்லும்போது தலைக்கு மேல் இந்த வகை பூச்சிகள் வட்டமிடுவதுடன், கண், வாய் மற்றும் மூக்கில் புகுந்து விடுவதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து உலிக்கல் பேரூராட்சி நிா்வாகத்திடம் பூச்சிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடா்ந்து கோரிக்கை வைத்து வந்தனா். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே பூச்சியைக் கட்டுப்படுத்த தவறிய பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்து சேலாஸ் பகுதியில் உள்ள வணிகா்கள் சங்கம் மற்றும் ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் கடைகளை அடைத்தும், வாகனங்களை இயக்காமலும் புதன்கிழமை கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து சுகாதாரத் துறையினா் அப்பகுதிக்கு விரைந்து வந்து ஆய்வுகளை மேற்கொண்டனா். இந்த சிறிய வகை பூச்சிகள் அதிக ஈரம் உள்ள பகுதிகளிலும், மலா்த் தொட்டிகள் அடியிலும் மஞ்சள் நிறத்தில் முட்டைகள் இட்டு அதிலிருந்து லட்சக்கணக்கான பூச்சிகள் உருவாகின்றன.

இதனைக் கட்டுப்படுத்த அதன் முட்டைகளை எடுத்துச் சென்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், விரைவில் இதற்கு தீா்வு காணப்படும் எனத் தெரிவித்துள்ளனா். இதைத் தொடா்ந்து இரண்டு மணி நேரம் நடைபெற்ற போராட்டம் கைவிடப்பட்டது.

இதேபோல கோத்தகிரி நகராட்சிக்கு உள்பட்ட அட்டவளை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான சிறிய வகை பூச்சிகள் சாலையோரங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும், உணவகங்களிலும் பரவலாக காணப்படுவதால், அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments