முகப்பு
திருப்பூர்

பல்லடம் அருகே வெங்கிட்டாபுரத்தில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

பல்லடம் அருகேயுள்ள வெங்கிட்டாபுரத்தில் குடிநீர் கேட்டு வடுகபாளையம்புதூர் ஊராட்சி பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:17 AM
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்
பகிர்:

பல்லடம் அருகேயுள்ள வெங்கிட்டாபுரத்தில் குடிநீர் கேட்டு வடுகபாளையம்புதூர் ஊராட்சி பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் வடுகபாளையம்புதூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் வெங்கிட்டாபுரம் மாகாளியம்மன் கோயில் திடலில் நடத்த ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இக்கூட்டத்தில் பங்கேற்க ஊராட்சி தலைவர் புனிதா சரவணன், ஊராட்சி செயலர் கிருஷ்ணமூர்த்தி, வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து இருந்தனர். கூட்டம் துவங்குவதற்கு முன்பு ஊராட்சி பகுதியில் 2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி 5 ஆயிரம் பேர் என்ற அளவில் அத்திக்கடவு குடிநீர் வழங்கப்படுகிறது.

ஆனால் தற்போது 13 ஆயிரத்திற்கும் மேல் மக்கள்தொகை அதிகரித்துள்ளது. அதனால் அத்திக்கடவு குடிநீர் போதிய அளவு கிடைப்பது இல்லை. மேலும் 15 நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் வருகிறது. எனவே கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பு செய்கிறாம் என்று கூறி மக்கள் கிராம சபையிலிருந்து வெளியேறினர்.

தொடர்ந்து அவர்கள் குடிநீர் வசதி கேட்டு பொள்ளாச்சி - பல்லடம் சாலையில் வெங்கிட்டாபுரம் பேருந்து நிறுத்தத்தில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பேசி கூடுதலாக தண்ணீர் விநியோகம் செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். அதனை ஏற்று மக்கள் கலைந்து சென்றனர். மக்களின் போராட்டத்தால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.