பஞ்சு நூல் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூர் பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச்சார்ந்த நிறுவனங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 2 நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிலும், கடந்த மே 2 ஆம் தேதி மேலும் ரூ.40 உயர்த்தப்பட்டது. இதனைக்கண்டித்து திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச்சார்ந்த நிறுவனங்கள் வரும் மே 16 முதல் மே 21 ஆம் தேதி வரையில் 6 வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தது. இதுதொடர்பான அவசர ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக்கூட்டத்துக்கு திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன் தலைமை வகித்தார். இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம்: பஞ்சு, பஞ்சு நூல் ஏற்றுமதியை இடைக்காலமாக தடை செய்ய வேண்டும். பஞ்சை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலுக்கு மாற்றம் செய்ய வேண்டும். நூல் இறக்குமதிக்கு வரியை விதிக்க வேண்டும். கடந்த மே மாதம் உயர்த்தப்பட்ட நூல் விலையை நூற்பாலை உரிமையாளர்கள் திரும்பப்பெற வேண்டும். நூல் விலை உயர்வைக் கண்டித்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த போராட்டத்தை 2 நாள்களாகக் குறைப்பது.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கோவைக்கு வரும் திங்கள்கிழமை வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வலியுறுத்துவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தக்கூட்டத்தில், மக்களவை உறுப்பினர்கள் பி.ஆர்.நடராஜன்(கோவை), அ.கணேசமூர்த்தி(ஈரோடு), கே.சண்முகசுந்தரம்(பொள்ளாச்சி), எஸ்.ஜோதிமணி(கரூர்),மாநகராட்சி மேயர் என்.தினேஷ்குமார், துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணியம், நிட்மா தலைவர் அகில் எஸ்.ரத்தினசாமி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜா எம்.சண்முகம், பியோ தலைவர் ஏ.சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.பி.முத்துரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.