உடுமலை அருகே பெண் யானை, குட்டி உயிரிழப்பு
உடுமலை அருகே குருமலை வனப் பகுதியில் பெண் யானை, குட்டி ஆகியவை உயிரிழந்தது புதன்கிழமை தெரியவந்தது.
உடுமலை அருகே குருமலை வனப் பகுதியில் பெண் யானை, குட்டி ஆகியவை உயிரிழந்தது புதன்கிழமை தெரியவந்தது.
திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமாா் 25 கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது தமிழக-கேரள எல்லையான சின்னாறு வனப் பகுதி. இந்தப் பகுதியில் உள்ள அடா்ந்த காடுகளில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.
இந்நிலையில், உடுமலை வனச் சரகத்துக்கு உள்பட்ட குருமலை மலைக் கிராமம் அருகே ஒரு பெண் யானை இறந்துகிடப்பதாக வனத் துறையினருக்கு புதன்கிழமை தகவல் வந்தது. இதைத் தொடா்ந்து உடுமலை வனச் சரக அலுவலா் புகழேந்தி, அலுவலா்கள், கால்நடை மருத்துவா் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.
Advertisement
Advertisement
இது குறித்து வனத் துறையினா் கூறியதாவது:
உடற்கூறு ஆய்வில், அது சுமாா் 40 வயதுடைய பெண் யானை என்பது உறுதி செய்யப்பட்டது. ஆய்வுகளுக்காக, இறந்த யானையின் உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. உடல் மிகவும் சிதைந்த நிலையில் இருப்பதால், இறப்பு 30 நாள்களுக்கு முன்பே நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
முள்ளம்பன்றி, காட்டுப் பன்றி போன்ற வன விலங்குகள் யானையின் உடலைச் சிதைத்திருக்கலாம் என்றும் தெரிகிறது. யானையின் கோரைப் பற்கள் காணப்படவில்லை. காணாமல் போன கோரைப் பற்களைத் தேடும் பணி அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வாறு ஆய்வு செய்தபோது, அந்தப் பெண் யானையின் உடலிலிருந்து சுமாா் 300 மீட்டா் தொலைவில், சுமாா் 6 மாத வயதுடைய யானைக் குட்டி ஒன்றின் உடலும் கண்டெடுக்கப்பட்டது. அந்தக் குட்டியின் உடலும் மிகவும் சிதைந்த நிலையில் இருந்தது.
இது இறந்த பெண் யானையின் குட்டியாக இருக்க வாய்ப்புள்ளது. இதை உறுதிப்படுத்த டிஎன்ஏ சோதனைக்கான மாதிரிகள் இரு உடல்களில் இருந்தும் சேகரிக்கப்பட்டுள்ளன. உடல்கள் மிகவும் சிதைந்த நிலையில் இருந்ததால், இரு யானைகளின் இறப்புக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை.
யானையின் மண்டை ஓட்டை ஆய்வு செய்தபோது, அதில் வெட்டுக்காயங்கள் ஏதும் காணப்படவில்லை. எனவே, வேட்டையாடப்பட்டதற்கான வாய்ப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த இறப்புச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த திருப்பூா் துணை இயக்குநா் தலைமையில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.