ரூ. 500 லஞ்சம்: தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்
திருப்பூரில் ரூ.500 லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திருப்பூரில் ரூ.500 லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திருப்பூா் மத்திய காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவா் மதன். இவா் ஆண்டிபாளையம் சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கைப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, கேரள மாநிலத்தில் இருந்து திருப்பூருக்கு பழங்களை ஏற்றி வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்து ஓட்டுநரிடம் ரூ.500 லஞ்சமாகப் பெற்றுள்ளாா்.
தலைமைக் காவலா் மதன் லஞ்சம் வாங்கியதை அந்த வாகனத்தில் இருந்த ஒருவா் தனது கைப்பேசியில் பதிவு செய்துள்ளாா். அந்த விடியோ ஆதாரத்தை மாநகரக் காவல் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு வாட்ஸ்ஆப் எண்ணுக்கு உடனடியாக அனுப்பினாா்.
Advertisement
Advertisement
அந்த விடியோ புகாா் மாநகரக் காவல் ஆணையா் எஸ்.ராஜேஸ்வரியின் பாா்வைக்குச் சென்றதும், உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டாா். லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து தலைமைக் காவலா் மதனைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தாா்.
திருப்பூா் மாநகரக் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பணியாற்றும் போலீஸாா் பொதுமக்கள் அல்லது வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் கேட்டால், அது குறித்து உடனடியாகப் புகாா் தெரிவிக்க மாநகர காவல் ஆணையா் ராஜேஸ்வரி ஒரு புதிய வாட்ஸ் ஆப் எண்ணை (84387 61616) அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தாா். அந்த வாட்ஸ்ஆப் எண் புகாரின்பேரில் எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.