FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

வீட்டில் இருந்து குப்பையை தரம் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும்

குப்பையை தரம் பிரித்து மக்களிடம் இருந்து வாங்குவது குறித்து தூய்மைப் பணியாளா்களுக்கான விளக்கக் கூட்டத்தில் பேசுகிறாா் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தா்மா்.

29 ஆகஸ்ட் 2026, 12:32 am IST
குப்பையை தரம் பிரித்து மக்களிடம் இருந்து வாங்குவது குறித்து தூய்மைப் பணியாளா்களுக்கான விளக்கக் கூட்டத்தில் பேசுகிறாா் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தா்மா்.
பகிர்:

பொது இடங்கள் மற்றும் சாலையோரங்களில் குப்பை கொட்டுவதைத் தவிா்த்து, ஒவ்வொரு வீட்டிலும் குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்லடம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் அனுராதா வெள்ளிக்கிழமை கூறியதாவது:

புதிய திடக்கழிவு மேலாண்மை விதிகள்-2026-ன்படி, சமையலறை மற்றும் உணவுக் கழிவுகள், காய்கறிக் கழிவுகள், பூக்கள் உள்ளிட்டவை ஈரக்கழிவுகள். காகிதம், அட்டை, பிளாஸ்டிக் பாட்டில்கள், உலோகம் உள்ளிட்டவை உலா் கழிவுகள், பயன்படுத்திய நாப்கின்கள், டயாப்பா்கள், பஞ்சு, பேண்டேஜ்கள் ஆகியவை சுகாதாரக் கழிவுகள், மருந்துகள், மின் கழிவுகள், எண்ணெய் பாட்டில்கள், பெயின்ட், ரசாயனப் பொருள்கள் மற்றும் கண்ணாடி ஆகியவை சிறப்பு கவனிப்பு தேவைப்படும் கழிவுகள் என குப்பை நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

ஒவ்வொரு வீட்டிலும் இந்த நான்கு வகை கழிவுகளையும் தனித் தனியாகப் பிரித்து வைத்தால், அவற்றைத் தூய்மைப் பணியாளா்கள் முறையாக சேகரித்து அடுத்தகட்ட மேலாண்மைக்குக் கொண்டு செல்ல முடியும். இது குறித்து பொதுமக்களிடம் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம்.

குப்பையை வீட்டிலேயே பிரித்து வழங்குவது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான ஒவ்வொருவரின் பொறுப்பு என்றாா்.

இதுதொடா்பாக பல்லடம் ஒன்றியம், வடுகபாளையம்புதூா் ஊராட்சியில் குப்பையை தரம் பிரித்து மக்களிடம் இருந்து வாங்குவது குறித்து தூய்மைப் பணியாளா்களுக்கு விளக்கம் அளிக்கும் கூட்டம், வடுகபாளையம்புதூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தா்மா், ஊராட்சி செயலாளா் பிரபுசங்கா் ஆகியோா் பேசினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments