10 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த வெள்ளக்கோவில் போக்குவரத்து சிக்னல் மீண்டும் இயங்கத் தொடங்கியது: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
வெள்ளக்கோவில் நகரின் மையப்பகுதியான முத்தூா் பிரிவு நான்கு சாலைச் சந்திப்பில் கடந்த 10 ஆண்டுகளாகச் செயல்படாமல் முடங்கிக் கிடந்த போக்குவரத்து சிக்னல், அதிகாரிகளின் நடவடிக்கையால் தற்போது மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வெள்ளக்கோவில் வழியே கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. நூற்பாலைகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் நிறைந்த இப்பகுதியில், நிமிஷத்துக்கு சராசரியாக 70 வாகனங்கள் வரை பயணிப்பதால் எப்போதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வந்தது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சிக்னல் ஓராண்டு மட்டுமே செயல்பட்ட நிலையில், அதன்பின் பழுதாகி முடங்கியது. இதனால் வாகனங்கள் தாறுமாறாகச் சென்று தொடா் விபத்துகள் ஏற்பட்டு வந்தன. போக்குவரத்து சிக்னலை மீண்டும் இயக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.
Advertisement
Advertisement
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பழுதடைந்த சிக்னல்கள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு தற்போது மீண்டும் முறைப்படி இயக்கப்பட்டுள்ளன. இந்த சிக்னல் பயன்பாட்டுக்கு வந்ததால் நகரில் விபத்துகள் குறையும், போக்குவரத்து நெரிசல் சீராகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் சண்முகம், நெடுஞ்சாலை ரோந்து உதவி ஆய்வாளா் மணிமுத்து மற்றும் அதிகாரிகளின் இந்த விரைவு நடவடிக்கைக்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.