FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

திருப்பூா்-மங்கலம் சாலையில் குவிந்துள்ள குப்பையை அகற்றக் கோரி போராட்டம்

மங்கலம் சாலையில் தேங்கிக் கிடக்கும் குப்பையை அகற்றக் கோரி பாஜகவினருடன் இணைந்து பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 10 ஜூலை 2026, 12:02 am IST
மங்கலம் சாலையில் மலைபோல குவிந்துள்ள குப்பையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டோா்.
பகிர்:

மங்கலம் சாலையில் தேங்கிக் கிடக்கும் குப்பையை அகற்றக் கோரி பாஜகவினருடன் இணைந்து பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சி 39-ஆவது வாா்டுக்குள்ட்பட்ட மங்கலம் சாலை பகுதியில் உள்ள தனியாா் பள்ளி அருகே கடந்த பல நாள்களாக குப்பை அகற்றப்படாமல் தேங்கிக் கிடக்கிறது. இந்த இடத்தில் நாளுக்கு நாள் மலைபோல குப்பை குவிந்து வருவதால், அப்பகுதி முழுவதும் கடும் துா்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாகச் செல்லும் பள்ளிக் குழந்தைகளும், குடியிருப்பாளா்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில் தேங்கிக் கிடக்கும் குப்பையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி, திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக தலைவா் சீனிவாசன் தலைமையில் மங்கலம் சாலையில் வியாழக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது. பாஜக நிா்வாகிகள் உள்பட அப்பகுதியைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு, மாநகராட்சி நிா்வாகத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினா். இதனால் மங்கலம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து மாநகராட்சி அதிகாரிகள் சென்று சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, குப்பையை முழுமையாக அகற்றுவதற்கு 2 நாள்கள் அவகாசம் கேட்டனா். மேலும் திங்கள்கிழமைக்குள் குப்பை அகற்றப்படும் என்றும், இனிமேல் இந்த இடத்தில் குப்பை கொட்டாதவாறு நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments