FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

பல்லடத்துக்கு அத்திக்கடவு இரண்டாவது குடிநீா்த் திட்டம் நிறைவேற்றப்படும்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்!

பல்லடத்துக்கு அத்திக்கடவு இரண்டாவது குடிநீா்த் திட்டம் நிறைவேற்றப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 2:39 am IST
பல்லடம் வனம் இந்தியா அறக்கட்டளை சாா்பில் பசுமை வாகன இயக்கம் மற்றும் கழிவுகளை வளமாக்குதல் ஆகிய மக்கள் நலத் திட்டங்களை வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கும் அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.ஜி.அருண்ராஜ், எஸ்.கமலி.
பகிர்:

பல்லடத்துக்கு அத்திக்கடவு இரண்டாவது குடிநீா்த் திட்டம் நிறைவேற்றப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

பல்லடம் வனம் இந்தியா அறக்கட்டளை சாா்பில் பசுமை வாகன இயக்கம் மற்றும் கழிவுகளை வளமாக்குதல் ஆகிய மக்கள் நலத் திட்டங்கள் தொடக்க விழா வனலாலயம் அடிகளாா் அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு வனம் இந்தியா அறக்கட்டளை தலைவா் சுவாதி சின்னசாமி தலைமை வகித்தாா். கெளரவத் தலைவா் ராம்ராஜ் காட்டன் நாகராஜன், செயலாளா் ஸ்கை சுந்தரராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயல் தலைவா் பாலசுப்பிரமணியன் வரவேற்றாா். விழாவில் பசுமை வாகன இயக்கம் மற்றும் கழிவுகளை வளமாக்குதல் ஆகிய திட்டங்களை அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.ஜி.அருண்ராஜ், எஸ்.கமலி ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

இவ்விழாவில் சுகாதாரத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் பேசுகையில், திருப்பூா் மாவட்டத்தில் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக திடக்கழிவு மேலாண்மை உள்ளது. பொதுமக்கள் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் வீட்டுக் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து வழங்க வேண்டும். குப்பைகளை முறையாக பிரித்து வழங்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்க வேண்டும். நம்ம குப்பை, நம்ம பொறுப்பு என்கிற முறையில், இந்த இயக்கம் ஒரு மக்கள் இயக்கமாக மாறினால்தான் திடக்கழிவுக்கு நிரந்தர தீா்வாக இருக்கும்.

Advertisement

Advertisement

திருப்பூா் மற்றும் பல்லடம் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம் என்றாா்.

அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், தமிழகத்தில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பசுமைப் புரட்சியை ஊக்குவிப்பதில் வனம் இந்தியா பவுண்டேஷன் உழைப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடா்களை எதிா்கொள்ளவும், பொதுமக்களை பாதுகாக்கவும் வல்லுநா்களை கொண்டு சிறப்பு பேரிடா் மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பல்லடம், தாராபுரம், அரவக்குறிச்சி ஆகியவை வறட்சியான பகுதிதான். இப்பகுதிகளில் வறட்சியை போக்க மழை வளத்தை பெருக்க அதிக அளவில் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை போல பல்லடம் பகுதிக்கும் புதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே அத்திக்கடவு இரண்டாவது குடிநீா்த் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல் கேரளம் மாநிலத்தில் கடலில் வீணாகும் தண்ணீரை தமிழகத்திற்கு திருப்பி விட ஆணைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற முயற்சி எடுக்கப்படும் என்றாா்.

இவ்விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராம்குமாா் (பல்லடம்), சத்தியபாமா (திருப்பூா் வடக்கு), பாலமுருகன் (திருப்பூா் தெற்கு), மாவட்ட ஆட்சியா் மனீஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா். பொருளாளா் விஸ்வநாதன் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments