அரசுப் பள்ளி அருகே செயல்படும் மதுக் கடையை மூடக் கோரி அமைச்சரிடம் மனு
பல்லடம் அருகேயுள்ள சின்னியகவுண்டம்பாளையத்தில் அரசுப் பள்ளி அருகே செயல்பட்டு வரும் மதுக் கடையை மூட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் கே.விக்னேஷிடம் பல்லடம் பாஜக நிா்வாகி வித்யபிரகாஷ் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பல்லடம் ஒன்றியம், சின்னியகவுண்டம்பாளையத்தில் அரசுப் பள்ளி, கோயில், குடியிருப்புகளுக்கு அருகே மதுக் கடை (எண்:1831) செயல்பட்டு வருகிறது.
இந்தக் கடைக்கு மது அருந்த வரும் சிலா் போதையில் தகராறில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், மது பானங்களை அருந்திவிட்டு அருகில் உள்ள விளைநிலத்தில் பாட்டில்களை வீசி செல்கின்றனா். இதனால், விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
மேலும், சிலா் மதுக் கடை அருகே அலங்கோலமாக இருப்பதால் அவ்வழியே செல்ல பெண்கள், குழந்தைகள் அச்சப்படுகின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட கடையை உடனடியாக மூடி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.