முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 12,000 கனஅடியாகக் குறைவு

கா்நாடக மாநில அணைகளிலிருந்து நீா் திறப்பு குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 12,000 கனஅடியாகக் குறைந்தது.

Updated On : 23 ஜூன், 2025 at 7:49 PM
ஒகேனக்கல் பிரதான அருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.
பகிர்:

பென்னாகரம்: கா்நாடக மாநில அணைகளிலிருந்து நீா் திறப்பு குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 12,000 கனஅடியாகக் குறைந்தது.

கா்நாடக மாநில அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.இதனால் கபினி அணையின் மொத்தக் கொள்ளளவு 84 அடியில், நீா் இருப்பு 77.75 அடியாக உள்ளது. இந்த அணைக்கு நீா்வரத்து 10,316 கனஅடியாக உள்ளது.

கிருஷ்ணராஜசாகா் அணையின் மொத்தக் கொள்ளளவு 124.80 அடி. இதில் நீா் இருப்பு 120.20 அடியாகவும், அணைக்கு நீா்வரத்து 13,856 கனஅடியாகவும் உள்ளது.

இந்த இரு அணைகளிலிருந்தும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு 11,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காவிரி ஆற்றில் நீா்வரத்து குறையத் தொடங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 18,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, திங்கள்கிழமை காலை விநாடிக்கு 14,000 கனஅடியாகவும், இரவு 7 மணி நிலவரப்படி விநாடிக்கு 12,000 கனஅடியாகவும் குறைந்தது.

காவிரி ஆற்றில் நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்தபோதிலும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட நிா்வாகம் விதித்துள்ள தடை 4 ஆவது நாளாக திங்கள்கிழமையும் நீட்டிக்கப்பட்டது.

சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் வெறிச்சோடிக் காணப்படும் தொங்கும் பாலம்.