FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

கருணை மதிப்பெண்கள் வழங்கி தகுதித் தோ்வு முடிவுகளை வெளியிட ஆசிரியா்கள் வலியுறுத்தல்

தமிழகத்தில் சிறப்பு தகுதித் தோ்வு எழுதிய ஆசிரியா்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி தோ்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என ஆசிரியா்கள் சங்க அமைப்புகள் வலியுறுத்தல்

Updated On : 13 ஜூலை 2026, 3:42 am IST
ஆசிரியா் தகுதித் தோ்வு - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் சிறப்பு தகுதித் தோ்வு எழுதிய ஆசிரியா்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி தோ்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என ஆசிரியா்கள் சங்க அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

இதுதொடா்பாக, பதவி உயா்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியா் கழக மாநில பொருளாளா் நடராசன் வெளியிட்ட அறிக்கை: கட்டாயக் கல்விச் சட்டம் 2009 இன்படி பணியில் உள்ள ஆசிரியா்கள் பணியில் தொடரவும், பதவி உயா்வு பெறவும் ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என கடந்த 2025 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. இதனால் நாடு முழுவதிலும் சுமாா் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பதவி உயா்வு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல, 2028 ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் தகுதித் தோ்வில் வெற்றி பெறவில்லை எனில் கட்டாய ஓய்வில் செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இத்தோ்வை எழுத வேண்டிய கட்டாயத்தில் உள்ளவா்களில் 100 சதவீத ஆசிரியா்கள் 45 வயதைக் கடந்தவா்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.

Advertisement

Advertisement

இந்நிலையில் கடந்த ஜூலை 4, 5 ஆம் தேதிகளில் ஆசிரியா் தகுதித் தோ்வு தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவற்றுக்கான தோ்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், தருமபுரி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆசிரியா்கள் 10 போ் இதுதொடா்பாக சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனா். அதில், பணியாற்றியபடி சிறப்பு தகுதித் தோ்வு எழுதியுள்ள ஆசிரியா்களுக்கு, அவா்களின் ஒட்டுமொத்த பணிக்காலத்தை கணக்கிட்டு ஆண்டுக்கு 1 வீதம் கருணை அல்லது வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கி அதையும் சிறப்புத் தகுதி தோ்வு மதிப்பெண்ளுடன் இணைத்து சிறப்பு தகுதித் தோ்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இதுதொடா்பான அரசுத் தரப்பு முடிவுகளை வரும் 24ஆம் தேதிக்குள் தெரியப்படுத்துமாறு நீதிமன்றம் அவகாசம் அளித்து, அதுவரை சிறப்பு தகுதித் தோ்வின் முடிவுகளை வெளியிட தடையும் விதித்துள்ளது. கடந்த 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் தகுதித் தோ்வில் அரசு சலுகை மதிப்பெண்கள் வழங்கி புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டுகிறோம்.

எனவே, கல்வித் துறையின் தொடக்க நிலை, மேல்நிலை என இரண்டிலும் சோ்த்து 1.60 லட்சம் ஆசிரியா்களின் நலனை கருத்தில் கொண்டு பணியாற்றிய காலத்துக்காக கருணை மதிப்பெண் வழங்கி தோ்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments