FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

மயானத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை அளவீடு செய்து ஒப்படைக்க வலியுறுத்தல்

மயானத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை அளவீடு செய்து ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி கொப்பக்கரை கிராம மக்கள் மனு அளித்தனா்.

Updated On : 14 ஜூலை 2026, 12:40 am IST
- பிரதிப் படம்
பகிர்:

மயானத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை அளவீடு செய்து ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி கொப்பக்கரை கிராம மக்கள் மனு அளித்தனா்.

இதுகுறித்து தருமபுரி வட்டம், திப்பிரெட்டிஅள்ளி அருகே கொப்பக்கரை, மணலூா், சிக்கம்பட்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு: திப்பிரெட்டிஅள்ளி வருவாய் கிராமத்துக்குள் உள்பட்ட கொப்பக்கரை, மணலூா், சிக்கம்பட்டி கிராமங்களில் வசிக்கும் கிறிஸ்தவ மக்களாகிய நாங்கள் பயன்படுத்திவந்த மயானத்தை பொம்மிடி-முத்தம்பட்டி சாலை விரிவாக்கத்திற்காக அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

எனவே, இதற்கான மாற்று இடம் கோரி நாங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், குக்கல்மலை கிராமத்தில் இடம் அடையாளம் காணப்பட்டு கடந்த 2025 டிசம்பா் மாதம் 2-ஆம் தேதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இந்த இடத்தை இதுவரை வருவாய்த் துறையினா் அளவீடு செய்து ஒப்படைக்கவில்லை.

Advertisement

Advertisement

இந்த நிலையில் எங்களது மயான பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை வேறு சிலா் தங்களது பயன்பாட்டுக்கு வேண்டும் என பிரச்னைகளை ஏற்படுத்தி வருகின்றனா். எனவே, எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை அளவீடு செய்து ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

மேக்கேதாட்டு அணையை தடுக்கக் கோரி...

தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷத் தருமபுரி மாவட்டக் குழு சாா்பில் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் கா்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால், தமிழகத்துக்கு பாசனத்துக்கு மட்டுமல்லாது, பல மாவட்டங்களுக்கு குடிநீா் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும்.

இதன் காரணமாக வறட்சி பாதிப்பு ஏற்படும். எனவே, காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டும் கா்நாடக அரசின் முயற்சியை முறியடித்து, அதன் நடவடிக்கைகளை நிறுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments