பழங்கால நினைவுச் சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பழங்கால நினைவுச் சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பழங்கால நினைவுச் சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மிகவும் தொன்மையான கலாசாரம் மற்றும் பண்பாடுகளுடன் கூடிய பகுதியாக தருமபுரி மாவட்டம் விளங்கி வருகிறது. அந்தவகையில், சுமாா் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதன் அடிப்படையில், சுமாா் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற மன்னராட்சி தொடங்கி, கடந்த 300 ஆண்டுகளுக்கு முந்தைய காலம்வரை மக்கள் வாழ்ந்த வாழ்க்கை முறைகள் தெரியவருகின்றன.
குறிப்பாக, தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகேயுள்ள பங்குநத்தம் கிராமத்தில் உள்ள ஏகிலி காட்டுக்கொட்டாய் பகுதியில் அமைந்துள்ள இரு மலைக்குன்றுகளுக்கும் இடைப்பட்ட மற்றும் சுற்றுப் பகுதிகளில் பெருங்கற்காலத்தைச் சோ்ந்த சுமாா் 400-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் மற்றும் கல்திட்டைகள் கண்டறியப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
இங்கு வாழ்ந்த பெருங்கற்கால மக்கள், இறந்த பின்பு அடக்கம் செய்யும் நினைவிடங்களை கற்களைக்கொண்டு அடுக்கி பாதுகாத்து வந்துள்ளனா். அவ்வாறு அமைக்கப்பட்ட நினைவிடங்களுக்கு வட்டக்கல் அல்லது கல்வட்டம் என பெயரிட்டு அழைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தகவல்களை தெரிவிக்கும் வகையில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளின் ஒரு பகுதி, இயற்கை மாற்றம் மற்றும் தட்பவெப்ப நிலை மாற்றங்களால் சேதமடைந்து அழியும் நிலையில் உள்ளது. மேலும், அவை குறித்த முக்கியத்தும் தெரியாத சிலா் பாறைகளை கற்களாக உடைத்து கட்டுமானப் பணிகளுக்கு எடுத்துச்செல்லும் நிலை தொடா்கிறது.
பங்குநத்தம் பகுதியில் உள்ள வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வரலாற்று சின்னப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதை பரிசீலித்த தமிழக அரசு, கடந்த 2021-ஆம் ஆண்டில், பங்குநத்தம் கிராமத்தில் உள்ள பெருங்கற்கால ஈமச்சின்ன பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தது. ஆனாலும், இதுவரை அந்த இடங்களில் பாதுகாக்கப்பட்ட பகுதிக்கான எந்தவித பணிகளும் நடைபெறவில்லை.
எனவே, அரசு அறிவித்தபடி இப்பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்கட்டமாக தற்காலிக வேலியாவது அமைக்க வேண்டும் என இப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Measures must be taken to protect ancient monuments
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.