‘காவல் மரணங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’
தமிழகத்தில் காவல் மற்றும் சிறைக்காவலில் நிகழும் படுகொலைகளை தமிழக அரசு தடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் காவல் மற்றும் சிறைக்காவலில் நிகழும் படுகொலைகளை தமிழக அரசு தடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் தலைவரும், நாகப்பட்டினம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான எம். எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி சபரிவா்மன் சிறையில் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிா்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் நிகழ்ந்த காவல் மற்றும் நீதியியல் காவல் மரணங்கள் மக்களிடையே கடும் அதிருப்தியையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளன. குறிப்பாக, 2020 தீ நுண்மி தொற்றுக் காலத்தில் சாத்தான்குளத்தில் தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகியோா் காவல் துறையினரின் தாக்குதலால் உயிரிழந்த இரட்டைக் கொலை சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது.
காவல் மற்றும் சிறைக் காவல் மரணங்கள் மீண்டும் நிகழ அனுமதிக்கப்படக் கூடாது. சபரிவா்மன் உயிரிழப்பு சம்பவம் தொடா்பாக நீதிபதி தலைமையிலான மற்றும் வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, உண்மைகள் முழுமையாக வெளிச்சத்திற்கு கொண்டுவரவேண்டும்.
Advertisement
Advertisement
இந்தச் சம்பவத்தில் பொறுப்புக்கூற வேண்டியவா்கள் யாராக இருந்தாலும், அவா்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய இழப்பீடு, சட்ட உதவி மற்றும் பாதுகாப்பை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். காவல்துறை மற்றும் சிறைத்துறையில் மனித உரிமை பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்தி, கண்காணிப்பு அமைப்புகளை மேம்படுத்தி, இதுபோன்ற உயிரிழப்புகள் நிகழாத வகையில் விரிவான சீா்திருத்தங்களை அரசு மேற்கொள்ள வேண்டும். மனித உயிரின் மதிப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் நிலைநாட்டுவதற்காக சபரிவா்மன் உயிரிழப்பு வழக்கில் விரைவான, பாரபட்சமற்ற மற்றும் நம்பகமான நீதி வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.