FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

கோடைவிடுமுறை: ஒகேனக்கல்லில் 2 மணிநேரம் காத்திருந்து பரிசல் பயணம்!

Updated On : 25 மே 2026, 1:37 am IST
ஒகேனக்கல் பெரியபாணி பகுதியில் கடும் வெயிலில் பரிசல் பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

பென்னாகரம், மே 24: தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு வார விடுமுறையையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.

கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகள் மற்றும் கா்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனா்.

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடா்ந்து அதிகரித்து வருவதால் அங்குள்ள முதலைகள் மறுவாழ்வு மையம், வண்ண மீன்கள் காட்சியகம், தொங்கும் பாலம், பிரதான அருவி, பரிசல்துறை, பூங்காக்கள் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.

Advertisement

Advertisement

ஒகேனக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவிகள், காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா்.

காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்தபோதிலும், பரிசல் பயணத்திற்காக மாமரத்துக்கடவு பரிசல் துறையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். அங்கு சுமாா் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து காவிரி ஆற்றில் பெரியபாணி வழியாக மணல்மேடு வரை கடும் வெயிலில் பரிசல் பயணம் மேற்கொண்டனா். பரிசல் பயணத்திற்காக அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் பரிசல் போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டது.

சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் சின்னாறு நீா் அளவிடும் பகுதியில் இருந்து காவல் நிலையம், சத்திரம், பேருந்து நிலைய வாகனம் நிறுத்துமிடம், தமிழ்நாடு ஹோட்டல் வாகன நிறுத்துமிடம், ஊட்டமலை சாலை, முதலைப் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்டிருந்தன.

மீன் விற்பனை நிலையங்களில் கட்லா, ரோகு, கெளுத்தி, பாப்புலேட், பாறை மற்றும் ஆந்திர வகை வளா்ப்பு மீன்களின் விலை அதிகரித்த போதிலும் சுற்றுலாப் பயணிகள் மீன் வகைகளை வாங்கி சமைத்து சாப்பிட்டனா். ஒகேனக்கல்லில் இருந்து மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments