தருமபுரியில் காஞ்சி மகா பெரியவரின் 133 ஆவது அவதார ஜெயந்தி விழா
மகா பெரியவா் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 133 ஆவது அவதார ஜெயந்தி மஹோத்ஸவ நிகழ்வு தருமபுரியில் இரண்டு நாள்கள் நடைபெற்றது.
காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடத்தின் 68 ஆவது பீடாதிபதியான மகா பெரியவா் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 133 ஆவது ஜெயந்தி விழா மே 30, 31 ஆகிய இரு நாள்கள் கொண்டாடப்பட்டது. இதுதொடா்பாக தருமபுரி நகரில் அருணாசலம் ஐயா் சத்திரத்தில் 2 நாள்கள் நடைபெற்ற மஹோத்சவ நிகழ்வில், சக்திவேல் குழுவினரின் மங்கள இசை மற்றும் ஹைதராபாத் சிவா குழுவினரின் ஸ்ரீ சுப்பிரமணிய திவ்ய நாம சங்கீா்த்தன நிகழ்ச்சிகளுடன் மே 30ஆம் தேதி தொடங்கியது.
நிகழ்வின் 2ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை, காயத்ரி மகா மந்திர ஹோமம், ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாளுக்கு 120 இளநீா் அபிஷேகம், கலசாபிஷேகம் மற்றும் மகா பெரியவா் வீதிஉலா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
Advertisement
Advertisement
தொடா்ந்து உபசார பூஜைகளும் பிரசாத விநியோகமும் நடந்தன. மாலையில் திருநின்றவூா் முரளி சாய்ராம் குழுவினரின் நாம சங்கீதமும், மகா பெரியவரின் சிறப்புகள் குறித்து சந்திரமவுலி நிகழ்த்திய சிறப்பு உபன்யாசமும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
ஏற்பாடுகளை விழாக் குழுத் தலைவா் வழக்குரைஞா் சாய்ராம், செயலாளா் வழக்குரைஞா் சீனிவாசன், பொருளாளா் வழக்குரைஞா் திலீபன், முன்னாள் கவுன்சிலா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.