அரூரில் தனி வட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ததால் பரபரப்பு
அரூரில் தனி வட்டாட்சியர் அலுவலகத்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ததால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
அரூரில் தனி வட்டாட்சியர் அலுவலகத்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ததால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம், டி.அம்மாப்பேட்டையைச் சேர்ந்த விவசாயிகள் சிவஞானம், கண்ணன், வகுத்துப்பட்டியைச் சேர்ந்த பெருமியம்மாள், பையர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பெருமாள், கசியம்பட்டியைச் சேர்ந்த மல்லிகா ஆகியோரது சுமார் 5.37 ஏக்கர் நிலங்களை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், வீட்டு மனைப்பட்டா வழங்குவதற்காக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு கையகப்படுத்தியது.
கையகப்படுத்தப்பட்ட இந்த நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை என அரூர் சார்பு நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட விவசாயிகள் வழக்கு தொடர்ந்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், விவசாயிகள் 5 பேருக்கும் உரிய இழப்பீட்டுத் தொகையினை வழங்க அரூர் சார்பு நீதிமன்றம் 2012-இல் உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், வருவாய்த் துறையினர் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
இந்நிலையில், மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் 5 பேருக்கும் வட்டியுடன் சேர்த்து ரூ.49.11 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் பிறகும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததால், அரூர் தனி வட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய அரூர் சார்பு நீதிமன்ற நீதிபதி கே.ஆர்.ஜோதி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவின்படி, தனி வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்ற நீதிமன்ற ஊழியர்கள் அங்கிருந்த மேஜைகள், டேபிள் உள்ளிட்ட தளவாடங்களை மினி சரக்கு ஆட்டோவில் ஏற்றினர்.
அப்போது, நீதிமன்ற ஊழியர்களின் நடவடிக்கைக்கு அரூர் வட்டாட்சியர் விஜயா தலைமையிலான வருவாய்த் துறையினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனையடுத்து நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கையை கைவிட்டனர். இதனால் அரூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.