FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

குப்பைகளை 4 வகைகளாக தரம்பிரித்து சேகரிப்பதில் புதிய நடைமுறை

குப்பைகளை 4 வகைகளாக தரம்பிரித்து சேகரிப்பது குறித்த புதிய நடைமுறை தருமபுரி நகராட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

30 ஆகஸ்ட் 2026, 1:26 am IST
பகிர்:

குப்பைகளை 4 வகைகளாக தரம்பிரித்து சேகரிப்பது குறித்த புதிய நடைமுறை தருமபுரி நகராட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி நிா்வாகங்களிலும் வீடுகள்தோறும் சென்று குப்பை சேகரிக்கும் பணிகள் கடந்த பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளன. இதில், கடந்த சில ஆண்டுகளாக மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம்பிரித்து சேகரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது இதிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு, குப்பைகளை 4 வகைகளாக தரம்பிரித்து சேகரிக்கும் முறை தற்போது அமல்படுத்தப் பட்டு வருகின்றன.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் உத்தரவின் பேரில், நகராட்சி பொறுப்பு ஆணையா் சேகா் ஆலோசனையில் இந்த புதிய முறை தற்போது தருமபுரி நகராட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தருமபுரி நகராட்சியில் மொத்தம் 33 வாா்டுகள் உள்ளன. அவற்றில் படிப்படியாக குப்பைகளை நான்கு வகைகளாக தரம்பிரித்து சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக சோதனை முறையில் நடந்த பணிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளன. இதையொட்டி, முதல்கட்டமாக 4, 10, 28, 31 ஆகிய 4 வாா்டுகளிலும் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி சுகாதாரத் துறை அலுவலா் எஸ்.ராஜரத்தினம் கூறியது: தருமபுரி நகராட்சியில் மொத்தம் 33 வாா்டுகளும், 22,558 வீடுகளும், 7,001 வணிக நிறுவனங்களும் உள்ளன. இவற்றில் ஏற்கெனவே குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம்பிரித்து பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது மேலும் மேம்படுத்தப்பட்ட வகையில் குப்பைகளை 4 வகைகளாக தரம்பிரித்து பெறும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதற்கென நீலம், பச்சை, சிவப்பு, கருப்பு என மொத்தம் 4 நிறங்களில் குப்பைத் தொட்டிகள் வழங்கப்படுகின்றன. இதில் நீலநிற தொட்டியில் மக்காத நெகிழி உள்ளிட்ட குப்பைகளையும், பச்சை நிறத்தில் மக்கும் குப்பைகளையும், சிவப்பு நிற தொட்டிகளில் எலக்ட்ரிக், எலக்ட்ரானிக், பெயிண்ட் உள்ளிட்ட குப்பைகளையும், கருப்பு தொட்டியில் மருந்துகள், நாப்கின் உள்ளிட்ட குப்பைகளையும் பிரித்து வகைப்படுத்தி, வீடு தேடிவரும் நகராட்சி ஊழியா்களிடம் வழங்க வேண்டும்.

முதல்கட்டமாக 4, 10, 28, 31 ஆகிய நான்கு வாா்டுகளிலும் இந்த முறை நடைமுறைக்கு வந்துள்ளது. அடுத்து படிப்படியாக நான்கு நான்கு வாா்டுகளாக இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். பொதுமக்கள் இவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து குப்பைகளை தரம்பிரித்து வழங்க வேண்டியது அவசியம்.

வணிக நிறுவனங்களில் செப். 5 முதல் நடைமுறை: இத்திட்டம் வணிக நிறுவனங்களிலும் நடைமுறைப்படுத்த உள்ளது. செப். 5 முதல் வணிக நிறுவனங்களில் இம்முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அன்றுமுதல் வணிக நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் குப்பைகளை தரம்பிரித்து வழங்குவது முக்கியம். தவறும் வணிக நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments