கிருஷ்ணகிரியில் இன்று மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
18 வயது வரையிலான மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
18 வயது வரையிலான மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் 0 முதல் 18 வயதுக்கு உள்பட்ட அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, இலவச அறுவைச் சிகிச்சை, உபகரணங்கள், கல்வி மற்றும் பராமரிப்பு உதவித்தொகை ஆகியவற்றை வழங்க தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்காக சிறப்பு மருத்துவ முகாம்கள் அந்தந்த வட்டார வள மையங்களில் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.
அதன்படி கிருஷ்ணகிரி வட்டார வள மையத்தில் ஆக.6-ஆம் தேதியும், கெலமங்கலத்தில் 7-ஆம் தேதியும், மத்தூரில் 8-ஆம் தேதியும், ஆக.9-ஆம் தேதி பர்கூரிலும், 10-ஆம் தேதி தளியிலும், 13-ஆம் தேதி சூளகிரியிலும், 14-ஆம் தேதி ஊத்தங்கரையிலும், 16-ஆம் தேதி காவேரிப்பட்டணத்திலும், 17-ஆம் தேதி ஒசூரிலும், வேப்பனப்பள்ளியில் 18-ஆம் தேதியும் அந்தப் பகுதியில் உள்ள வட்டார வள மையங்களில் நடைபெறுகிறது.
ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளி, பள்ளி ஆயத்த பயிற்சி மையம் உள்ளடங்கிய கல்வி மையம், இல்லம் சார்ந்த பயிற்சி மையங்களில் உள்ள மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் இந்த சிறப்பு முகாமில் பங்கேற்கலாம்.
முகாமில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மதிய உணவு, தேநீர் மற்றும் பயணப்படி வழங்கப்படும். மேலும், தேசிய அடையாள அட்டை பெறாதவர்கள், உதவி உபகரணங்கள், அறுவைச் சிகிச்சை தேவைப்படுவோர் தங்களுடன் 5 புகைப்படங்கள், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வருமானச் சான்று நகல், பள்ளிச் சான்று ஆகியவற்றுடன் கொண்டு வரவேண்டும் என அதில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.