FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

விநாயகா் சிலைகளை தயாரிக்க ரசாயனப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது

விநாயகா் சிலைகளை தயாரிக்க ரசாயனப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் அறிவுறுத்தி உள்ளாா்.

27 ஆகஸ்ட் 2026, 3:51 am IST
கோப்புப்படம்.
பகிர்:

விநாயகா் சிலைகளை தயாரிக்க ரசாயனப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் அறிவுறுத்தி உள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீா்நிலைகள் நமக்கு குடிநீா் ஆதாரத்தை தருகிறது. நீா்நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகா் சதுா்த்தி விழாவைக் கொண்டாடும் போது, சிலைகளை நீா்நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசுக் கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் கரைக்க வேண்டும்.

Advertisement

Advertisement

களி மண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டா் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தொ்மாகோல் கலவையற்றதுமான சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப் பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

சிலைகளில் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலா்ந்த மலா் கூறுகள், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொா்மாகோல் பொருள்களை பயன்படுத்தக் கூடாது.

சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருள்களுக்கு பதிலாக, இயற்கைப் பொருள்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

விநாயகா் சதுா்த்தி விழாவின்போது சுற்றுச்சூழலுக்கு உகந்த பூக்கள், இலைகள் மற்றும் துணிகளை பூஜைப் பொருள்களாக பயன்படுத்த வேண்டும். பிரசாத விநியோகத்துக்கு மக்கும் அல்லது மீண்டும் பயன்படுத்தக் கூடிய தட்டுகள் மற்றும் கண்ணாடி கோப்பைகளை பயன்படுத்தலாம். அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments