FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஒருங்கிணைந்த பண்ணையம்: வேளாண் சாகுபடிக்கான செலவு குறையும்: ஆட்சியர்

ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் வேளாண் சாகுபடிக்கான செலவு குறையும் என்றார் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம். 

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் வேளாண் சாகுபடிக்கான செலவு குறையும் என்றார் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம். 
நபார்டு வங்கியின் சார்பில் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் அவர் பேசியது: விவசாயிகள் காலநிலைக்கேற்ப பயிர் செய்ய வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன் வரை பந்தல் அமைத்து உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் ஆடிப்பட்டத்தில் தான்  பயிர் செய்யப்படும். ஆனால்,  தற்போது நிரந்தர பந்தல் அமைத்து ஆண்டு முழுவதும் காய்கறிகள் கிடைக்கும் வகையில் புதிய ரக விதைகள், தொழில்நுட்பங்கள் வேளாண் துறையின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. 
விவசாயிகள் குறிப்பிட்ட பயிர்களை மட்டுமே தொடர்ந்து பயிர்செய்தால் லாபம் அதிகம் ஈட்ட முடியாது. விவசாயத்தை நீர் சிக்கனம் கடைப்பிடிக்கும் வகையில் சொட்டுநீர்ப் பாசனம் அமைப்பதன் மூலமும்,  நிலத்திலேயே ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து, கால்நடை, மீன்வளர்ப்பு மற்றும் கால்நடை சாணக்கழிவில் இருந்து இயற்கை மண்புழு உரம் தயாரித்தல் உள்ளிட்ட விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டால் விவசாயம் செய்வதற்கான செலவு குறைவதுடன், அதிகளவில் வருமானம் ஈட்ட இயலும்.
மேலும், விவசாய விளைபொருள்கள் போக மீதமுள்ள வேளாண் கழிவுகள் கால்நடைகளுக்கு தீவனங்களாக கிடைக்கும். பயிர்களை சுழற்சி முறையில் பயிர் செய்ய வேண்டும். விவசாயிகள் தேனீ வளர்ப்பதன் மூலம் இயற்கையான மகரந்தச் சேர்க்கை நடைபெற்று, அதிக மகசூல் கிடைப்பதுடன், தேன் உற்பத்தியும் நடைபெறும்.
காய்கறிகள் பந்தல் அமைத்து பயிர்செய்ய மானியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழக அரசால் உழவன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு விவசாயிகளினால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் விதை இருப்பு, உரம் இருப்பு, மண்வளத்துக்கு ஏற்ற பயிர் குறித்த பல்வேறு தகவல்களை எளிதில் பெற இயலும்.
மேலும், விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருள்களை வேளாண் விற்பனை நிலையங்கள் மூலம் நேரடியாக விற்பதன் மூலமும், நல்ல விலை கிடைக்கும் வரை வேளாண் கிட்டங்கிகளில் இருப்பு வைத்து விற்பனை செய்வதன் மூலமும் அதிக லாபம் ஈட்ட முடியும் என்றார். 
முன்னதாக, கூட்ட அரங்க வளாகத்தில் பல்வேறு வகைகளில் தேனீவளர்ப்பு பெட்டிகள் மற்றும் தேனீ வளர்ப்புக்கான உபகரணங்கள் கண்காட்சியையும், நெகிழிப் பைகளுக்கு மாற்றாக பல்வேறு அளவுகளிலும், வடிவங்களிலும், எளிதில் பல்வேறு உபயோகங்களுடன் வடிவமைக்கப்பட்ட துணிப் பைகளையும் ஆட்சியர் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (ஹீல்ஸ்) நிறுவன தலைவர்  மற்றும் இயக்குநர் ராதா தாமோதரம், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் எஸ்.கே.தினேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சி.மாலதி, வேளாண் துறை இணை இயக்குநர் ஜே.சேகர், மகளிர் திட்ட இயக்குநர் மணி, ஹீல்ஸ் நிறுவன இயக்குநர், செயலர் எம்.எஸ்.எ.சதீஷ்பாபு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக உழவியல் துறை தலைவர் வி.கீதாலட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எம்.முத்தரசு, வேளாண் அறிவியல் நிலைய தலைவர் என்.அகிலா உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments