FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

வேலூர்,பொத்தனூர் பேரூராட்சிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: பொதுமக்கள் அவதி

பரமத்திவேலூர் வட்டம், பரமத்தி, பொத்தனூர், வேலூர் ஆகிய பேரூராட்சிகளில் விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீர் கடந்த சில தினங்களாக

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 8:30 am IST
பகிர்:

பரமத்திவேலூர் வட்டம், பரமத்தி, பொத்தனூர், வேலூர் ஆகிய பேரூராட்சிகளில் விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீர் கடந்த சில தினங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பொத்தனூர், பரமத்தி, வேலூர் ஆகிய மூன்று பேரூராட்சிகள் மூலம் காவிரி ஆற்றில் நீர் ஊற்று கிணறுகள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
ஆனால், கடந்த சில தினங்களாக பொத்தனூர், வேலூர் மற்றும் பரமத்தி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குடிநீர் சீராக வழங்கப்படாமல் உள்ளது.
இதனால் லாரிகள், டிராக்டர் வாகனங்கள் மூலம் தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து பொத்தனூர் பேரூராட்சி செயல் அலுவலர் கீதா கூறியதாவது:
தற்போது காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் நீர் ஊற்று கிணறுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதனால் சேறும், சகதியுமாக தண்ணீர் வருவதால் மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீரைத் தேக்கி அதில் சுத்தம் செய்து பின்னர் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். 
வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் கூறியதாவது: காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையத்தில் உள்ள நீர் ஊற்று கிணறும், மின் மோட்டார்களும் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், ஜெனரேட்டர் மூலம் ஒரு சில பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் அனிச்சம்பாளையம் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த நீர் ஊற்று கிணறு மற்றும் மின் மோட்டார் அறை இடிந்து காவிரியில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், குப்புச்சிபாளையம், அனிச்சம்பாளையம், படமுடிபாளையம் மற்றும் ஒழுகூர்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுத் தொடர்ந்து குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments