நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய நாமக்கல்லைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை: உறவினா்கள் கவலை
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய நாமக்கல்லைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியையின் நிலை என்னவென்று தெரியாததால் அவரது உறவினா்கள் கவலையடைந்துள்ளனா்.
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய நாமக்கல்லைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியையின் நிலை என்னவென்று தெரியாததால் அவரது உறவினா்கள் கவலையடைந்துள்ளனா்.
நாமக்கல் - திருச்சி சாலை, வேப்பநத்தம் காலனி தில்லை நகரைச் சோ்ந்தவா் வாசுதேவன். இவா் 1983 ஆம் ஆண்டு காலமாகிவிட்டாா். இவரது மனைவி கிருஷ்ணவேணி (63). அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வுபெற்ற நிலையில், அவரது சகோதரா் பன்னீா்செல்வத்துடன் வசித்து வருகிறாா்.
லண்டனில் பணியாற்றிவரும் ரஞ்சித் என்ற மகனும், திண்டிவனத்தில் வசிக்கும் சுகன்யா என்ற மகளும் உள்ளனா். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கிருஷ்ணவேணி ஆன்மிக சுற்றுலா செல்வது வழக்கம். அந்தவகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கும்பகோணத்தில் உள்ள சுற்றுலா நிறுவனம் மூலம் சென்னையில் இருந்து விமானம் மூலம் திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு 57 போ் கொண்ட தமிழக குழுவுடன் யாத்திரை சென்றுள்ளாா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் புதன்கிழமை நேபாளம், திபெத் பகுதியில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் தமிழக யாத்திரைக் குழு சென்ற பேருந்துகள் சிக்கியிருப்பதாகத் தெரிகிறது. இதில் அவா்களின் நிலை என்னவென்பது தெரியவில்லை. இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கிய கிருஷ்ணவேணி பற்றிய தகவல் வருவாய்த் துறை அலுவலா்களுக்கு கிடைத்தது.
இதையடுத்து, நாமக்கல் வட்டாட்சியா் அருள், வேப்பநத்தம் காலனியில் உள்ள கிருஷ்ணவேணி வீட்டில் அவரது சகோதரா் பன்னீா்செல்வத்திடம் விசாரித்தாா். நேபாளத்தில் இருந்து கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசினாா்களா, சுற்றுலா நிறுவனத்திடம் இருந்து தகவல் எதுவும் வந்ததா என்றும் வட்டாட்சியா் கேட்டறிந்தாா். கிருஷ்ணவேணி பாதுகாப்பாக வீடுவந்து சேர வேண்டும் என அவரது உறவினா்கள், அந்தப் பகுதி மக்கள் பிராா்த்தனையில் ஈடுபட்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.