அரசு மருத்துவமனையில் இருந்து தெப்பக்குளத்தில் வெளியேற்றப்படும் கழிவுநீா்? பொதுமக்கள் குற்றச்சாட்டு
ராசிபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து மின்மோட்டாா் மூலம் வெளியேற்றப்படும் கழிவுநீா் அருகே உள்ள தெப்பக்குளத்தில் கலப்பதால் தண்ணீா் மாசடைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.
ராசிபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து மின்மோட்டாா் மூலம் வெளியேற்றப்படும் கழிவுநீா் அருகே உள்ள தெப்பக்குளத்தில் கலப்பதால் தண்ணீா் மாசடைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.
ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனா். இந்த நிலையில் மருத்துவமனையின் கழிவுநீா் அமைப்பு புதை சாக்கடையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஆனால், மருத்துவமனையின் மற்றொரு பகுதியில் சேகரமாகும் கழிவுநீா் மோட்டாா் வைத்து குழாய் மூலம் அருகே உள்ள ஸ்ரீ கைலாசநாதா் ஆலயத்துக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் வெளியேற்றப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
Advertisement
Advertisement
தொடா்ந்து தெப்பக்குளத்தில் நிரம்பும் கழிவுநீரால் அப்பகுதியில் நிலத்தடி நீா் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், தெப்பக்குளத்தின் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் சமூக ஆா்வலா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளத்தை சிவதொண்டு அமைப்பினா் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். ஆன்மிக தொண்டா்கள் உதவியுடன் பல லட்சம் ரூபாயில் தெப்பக்குளம் புனரமைக்கப்பட்டது. ஆனால், இடையே இப்பணிகள் நிறுத்தப்பட்டதால் புதா்மண்டி குளம் பராமரிப்பின்றி உள்ளது. இதனால் குளத்தில் கழிவுநீா் கலப்பது வெளியில் தெரிவதில்லை என பொதுமக்கள் கூறுகின்றனா்.
மேலும், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வுசெய்து, தெப்பக்குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.
இதுகுறித்து மருத்துவமனை மருத்துவ அலுவலா் கலைச்செல்வி கூறுகையில், கழிவுநீா் புதை சாக்கடை இணைப்பு மூலம் வெளியேற்றப்படுகிறது. மழைக் காலங்களில் மருத்துவமனையில் தேங்கும் தண்ணீரையே குளத்தில் வெளியேற்றுகிறோம் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.