சேலத்தில் 12 பசுமைவெளி பூங்காக்களை முதல்வர் நாளை திறந்து வைக்கிறார்
சேலம் மாநகராட்சிப் பகுதியில் ரூ.5.7 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 12 பசுமை வெளிப் பூங்காக்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை (ஆக.31) திறந்து வைக்கிறார்.
சேலம் மாநகராட்சிப் பகுதியில் ரூ.5.7 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 12 பசுமை வெளிப் பூங்காக்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை (ஆக.31) திறந்து வைக்கிறார்.
சேலம் மாநகராட்சிக்குள்பட்ட சூரமங்கலம் மண்டலம் - கோட்டம் எண் 19 தர்ம நகர், கோட்டம் எண் 23 முல்லை நகர், கோட்டம் எண் 24 கிழக்கு மேம்பால நகர், கோட்டம் எண் 25 அபிராமி கார்டன், அஸ்தம்பட்டி மண்டலம் - கோட்டம் எண் 6 பிரகாசம் நகர், பரமன் நகர், குறிஞ்சி நகர், கோட்டம் எண் 8 கம்பர் தெரு, அம்மாப்பேட்டை மண்டலம் - கோட்டம் எண் 40 அய்யாசாமி பார்க், கோட்டம் எண் 43 யெல்லீஸ் கார்டன், கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 50 அபிராமி கார்டன், காந்திநகர் ஆகிய 12 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பசுமை வெளிப் பூங்காக்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை காலை திறந்து வைக்கிறார்.
மேலும் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்வதற்கு ரூ.1.38 கோடி மதிப்பீட்டில் 55 இரண்டடுக்கு மூன்று சக்கர மின்கல மோட்டார் வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் வழங்குகிறார்.
இந்த பூங்காக்களில் மூத்த குடிமக்கள் மற்றும் பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய ஏதுவாக நடைபாதைகள், 8 வடிவிலான நடைபயிற்சி மேடைகள், தியான மண்டபம், மூலிகை பண்ணைகள், இறகு பந்து , கூடைப்பந்து விளையாட்டுத் திடல்கள், உடற்பயிற்சி கூடங்கள் , குழந்தைகளை கவரும் வகையில் வண்ண ஓவியங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், வண்ண ஒளி விளக்குகள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட பிற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் இப்பூங்காக்களில் சிறப்பு அம்சமாக இங்குள்ள மரம், செடி, கொடிகளிலிருந்து கிடைக்கக் கூடிய இழை , தழை போன்ற மக்கும் கழிவுகளைக் கொண்டு இயற்கை உரம் தயாரிப்பதற்காக தள கலவை உரக்கிடங்குகளும், பூங்காக்களின் மின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சூரிய ஒளி சக்தியின் மூலம் மின்சாரம் பெறும், சூரிய மின்தகடு பூங்காக்களில் அமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.